xxxvi

புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.         7

ஏழ்கடல்சூழ் தென் னிலங்கைக்கோமானை எழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலும் மதில்புல்கி யழகமரும்
நீண்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.           8

ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவ ரறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.           9

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகம்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.           10

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.         11

திருச்சிற்றம்பலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருமேற்றளி
பண் -- நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தா யெந்தைபிரான் திருமேற்ற ளியுறையும்
எந்தாய் உன்னைஅல்லால் இனிஏத்த மாட்டேனே.        1

ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திருமேற்ற ளியுறையும்
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.    2

மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திருமேற்றளி யுறையும்
ஏறே உன்னை அல்லால் இனியேத்த மாட்டேனே.        3