குமரர்களோடும் என் இல்லத்தில் எழுந்தருளி இருத்தல் வேண்டும் என்றனன்.
மனக்கருத்தை முற்றுவிக்க வாயிலில் வீற்றிருக்கும் பெருமானாரைத்
தோள்தினவு தீரப்போருக்கு அழைத்தனன் வாணன். பெருமான்
புன்முறுவலுடன் ‘முப்பதுமுறை உன்னிடத்துத் தோற்ற கண்ணன்
உபமன்னியர்பால் சிவதீக்கை பெற்று எம்மைப் பூசித்துப் பெருவலி பெற்று
நின்னை வெல்லும் வலியினனாய் நின்மகள் உஷைக்கோர் பழிவருங்கால்
மதிற் கொடியும் அற்றுவிழும் துன்னிமித்தத்தில் போர்க்கு வருவன்’ என்றனர். அங்ஙனே, உஷை கனாக் கண்டு நனவில் வருந்தும்போது
சித்திரலேகை என்னும் தோழி தீட்டிய அரசிளங்குமரர்களுள் தன்னைக்
கனவிற் கலந்தவனைக் காட்டக் கண்டு கண்ணபிரான் பெயரனும்
பிரத்தியும்நன் மகனுமான அநிருத்தனைத் துயிலும் அணையொடும்
கொணர்ந்தனள் தோழி.
அந்தப்புரத்தில் அவனொடும் இருந்த உஷை கருவுற்றமை அறிந்த
வாணன் அநிருத்தனை அரிதிற் சிறைப்படுத்தினன்.
அநிருத்தன் சிறைப்பட்டமை நாரதரால் அறிந்த கண்ணன்
சோணிதபுரத்தின்மேற் படையெடுத்துழி வாயிலில் காவல்கொண்டிருந்த
சிவபிரானார் பல்வகையாகத் தேற்றி என்னையும் வெல்லும் ஆற்றலை
முன்னொருகால் மந்தரமலையில் வழங்கியுள்ளோம் அதனை மறந்தனை’
ஏனத் துவாரகை மன்னனைத் தெருட்ட வேறு வழியின்மையால் எதிர்நின்று
போர்செய்கையில் கண்ணனுக்கு வெற்றியை வழங்கினர்.
இவ்வாறே உமையம்மையார், விநாயகர், முருகப்பெருமானார் இருந்த
ஏனைய மூன்று வாயில்களையும் கடந்தபோது வாணன் கண்ணனுடன்
போர்செய்து முடிவில் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறு கரங்களை
அறுபட் டிழந்துழிச் சிவபெருமான் எதிரெழுந்தருளிக் ‘கண்ணனே நின்போல்
என்பால் அன்பனாகிய வாணன் நம்மை வழிபட இரு கரங்களை விடுக’ என
அருளினர். கேட்ட கண்ணன் ‘நும் அன்பர் எனக்கும் அன்பரேயாவர்’ என
நாற்கரம் விடுத்தனர்.
சிவபிரான் புன்முறுவல் பூத்து வாணனை நோக்கி ‘தோள் தினவு
தீர்ந்தது போலும்’ என வினவி உஷையை அநிருத்தனுக்கு மணம் புரிவித்துத்
துவாரகைக் கனுப்பினர். வாணனுக்குக் குடமுழா முழக்கும் பேறு அளித்துக்
கைலைக்கேகினர் பெருமானார்.
இத்தலம் திருவோணகாந்தன் தளிக்கு மேற்கில் ஒரு பர்லாங்கு
தொலைவில் வயற்கண் உள்ளது.
|