மேற்கே 2? மைலில் உள்ள திருமாற்பேறு என்னும் ஊரிலுள்ளது. இறைவன்
திருப்பெயர் மால்வணங்கீசர். இறைவி திருப்பெயர் கருணை நாயகி.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம் இரண்டும் திருநாவுக்கரசர் திருப்பதிகம்
நான்கும் கொண்ட தலம் இது.
அந்தகேசம்: இரணியாட்சன் மகன் அந்தகாசுரன் அந்தகேசப்
பெருமானைப் பூசனை புரிந்து பெற்ற வரத்தினால் திருமால் முதலான
தேவர்களைப் புறங்கண்டு அரசாண்டு வந்தனன். தேவர்கள் அவனுக்குப்
பயந்து பெண்ணுருக்கொண்டு திருக்கயிலையில் இறைவியின் கணங்களொடும்
இருந்தனர். அறிந்த அசுரன் அங்குப் போர் செய்தற்குச் செல்ல அம்மையார்
அருளைப்பெற்றுத் திருமால் அளவில் மகளிர் சேனையைச் சிருட்டித்து
அனுப்பத் தோற்றோடினன்.
அதுகாலை இறைவனார் பேரழகுடைய பிட்சாடனகோலம் பூண்டு
தாருகாவன முனிவர் மனைவியர்பாற் சார்ந்து மயல் பூட்டினமையால்
அப்பெண்டிர் கற்பினை இழந்தனர். அறிந்த முனிவர் சிவபெருமானை
அழித்தற் பொருட்டு வேள்வி ஒன்றியற்றி அவ் வாபிசாரயாகத்திற்றோன்றிய
முயலகன், புலி, பாம்பு, மான், பூதம், மழு, யாகத்தீ இவற்றை ஏவினர்.
பெருமானார் அவற்றை அடக்கி ஏன்றுகொண்டனர்; மேலும் அம்முனிவரர்
முன் திருக்கூத்தியற்றி நல்லறிவு அருள் செய்தனர். பிழை பொறுத்து
முத்தியளிக்க வேண்டிய முனிவரர்க்குக் ‘காஞ்சியில், புல்பூடு முதலாம்
எத்துணைத் தாழ்ந்த பிறப்பிற் றோன்றினும் முத்தி கைகூடும். ஆகலின்,
நீங்கள் காஞ்சியில் பிறந்து இல்லறமினிது நடாத்தி முத்தி அடைக’
என்றருளினர். பெருமானார் திருவாணைப்படி பிருகு முனிவர் முதலாம்
நாற்பத்தொண்ணாயிரவரும் காஞ்சியில் பிறந்து சிவபூசை செய்து
வாழ்ந்தமையால் காஞ்சியில் உள்ளார் யாவரும் முனிவர்களே; அத்தலத்துள்ள
கல்லெல்லாம் இலிங்கமே; நீரெல்லாம் கங்கையே; பேசுகின்ற பேச்செல்லாம்
மந்திரங்களே; செய்யும் செயல்கள் யாவும் இறைவனுக்கு ஆம் திருப்பணியே;
எனவே, இயமனுக்கு அந்நகரில் புக உரிமையில்லை.
பெருமானார் திருக்கயிலைக் கெழுந்தருளிய பின் மீண்டும் அந்தகாசுரன்
போருக்குச் சென்றனன். இறைவனார் வயிரவ மூர்த்தியை அனுப்பினர். அவர்
எதிர்சென்று அந்தகனைச் சூலத்தில் ஏந்தி திருநடம் புரிந்தனர். அசுரன்
அறிவுபெற்றுச் சூலத்திற் கிடந்தவாறே துதித்தனன். வயிரவர் மகிழ்ந்து
வேண்டும் வரம் கேள் என்றருளி முத்தி வேண்டினன் அசுரன். வயிரவர்
இறைவன் திருக்குறிப்பின்படி காஞ்சியை அடைந்து சூலத்திற் கிடக்கும்
அந்தகனைத் திருவேகம்பர் திருக்கோயிற் சிவகங்கையில் மூழ்குவித்துத்
திருவருளை நல்கிப் பாசத்தைப் போக்கினர். அந்தகன் தான் முன்பு
வழிபட்டு வரம்பெற்ற இலிங்கத்துள் கலந்து ஒன்றுபட்டனன்.
இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே எட்டுக் கல் தொலைவில்
திருப்புட்குழியில் உள்ளது.
|