சிவாநுபூதியிலேயே திளைத்திருந்த ஞானப்பிரகாசர்,
அருள்நிலை கைவரும் பக்குவத்திலிருந்த ஞானசம்பந்தரை 'நிற்க' எனக் கட்டளையிட்டு
உட்சென்றார். ஆசாரியர் பெற்ற சிவாநுபூதியை ஞான சம்பந்தரும் கைவரப் பெற்றவராய்
மாளிகை வாயிலில் கைவிளக்கு ஏந்தியவராகவே நின்றார். ஞானசம்பந்தரின்
பெருமையை ஞாலம் அறியச்செய்து அதன்மூலம் சைவப் பயிர் தழைக்க இறைவன் திருவுளம்
பற்றினான் போலும். அன்றிரவு பெருமழை பெய்தது. சிவாநுபூதியில் திளைத்திருந்த
ஞானசம்பந்தர் மீது ஒருதுளி மழை கூடப்படவில்லை. விளக்கோ அணையாது
சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது.
|
குருஞானசம்பந்தராயினார்:
|
வைகறைப்
பொழுதில் ஞானப்பிரகாசரின் பத்தினியார் சாணம் தெளிக்க வருங்கால்,
ஞானசம்பந்தர் அநுபூதி நிலையில் நிற்பதையும், விளக்குச் சுடர்விட்டுப்
பிரகாசிப்பதையும் கண்டு உட்சென்று பதியிடம் வியப்புடன் அதனை வெளியிட்டார்.
|
ஞானப்
பிரகாசர் விரைந்து வந்து பார்த்து, ஞானசம்பந்தரிடம் திருவருள்
பெருகுகின்ற நிலையைக் கண்டு மகிழ்ந்து "ஞானசம்பந்தா! நீ ஆசாரியனாக
இருந்து, பக்குவம் உடையவர்களுக்கு ஞானோபதேசம் செய்து ஆசாரியனாக
விளங்குவாயாக" என்று அருளினார். அப்பொழுது ஞானசம்பந்தர்,
|
|
"கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை
கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சை யோஇணங் கார்புரத்தைச்
சினக்குங் கமலையுள் ஞானப்ர காச சிதம்பரஇன்
றுனக்கிச்சை எப்படி அப்படி யாக உரைத்தருளே"
|
என்ற பாடலைப்பாடி "எங்குச்சென்று
எவ்வாறு இருப்பேன்" என்று விண்ணப்பிக்க, ஞானப்பிரகாசர், "மாயூரத்தின்
ஈசான்ய பாகத்தில் வில்வாரணியமாய் உள்ளதும், திருக்கடவூரில் நிக்கிரகம்
பெற்ற எமதருமனுக்கு அநுக்கிரகம் செய்ததும் ஆன தருமபுரத்தில் இருந்து
கொண்டு, அன்பு மிக உண்டாய், அதிலே விவேகமுண்டாய், துன்ப வினையைத்
துடைப்ப துண்டாய், இன்பம் தரும் பூரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி
வருங்காரணர்க்கு உண்மையை உபதேசித்துக் குருவாக விளங்குவாயாக" என்று
கட்டளையிட்டருளினார். ஞானசம்பந்தர், "குருஞானசம்பந்தர்" ஆயினார். |
|