எண்ணினார். சொக்கநாதரை வேண்டினார். கருத்தறிந்து முடிக்கும் கண்ணுதற் கடவுளும் அன்றிரவு அவர்
கனவில் தோன்றி, 'நாம் பொற்றாமரைத் தடாகத்தின் ஈசான்ய பாகத்தில் கங்கைக்குள்
இருக்கிறோம். நம்மை எடுத்துப் பூசிப்பாயாக' என அருளினார். அவ்வண்ணமே மறுநாள் காலையில்
பெருமானின் கருணையை வியந்து போற்றிப் பொற்றாமரைத் தடாகத்தில் மூழ்கினார். ஸ்ரீ
சொக்கநாதப் பெருமான் கண்ணுக்கினிய பொருளாகத் தமது கரத்தில் வரப்பெற்றார். 'ஆசாரியன்
மூலமாகத் தீக்ஷை பெற்றுத்தானே சிவபூசை புரிதல் வேண்டும்; ஆசாரியன் வேண்டுமே; சிவஞான
உபதேசம் பெறவேண்டுமே; எப்படிப் பூசையைப் புரிவேன்! என்ற எண்ணம் தோன்றவே, அது பற்றி
இறைவனிடமே முறையிட்டார்.
ஞானாசாரியனை அடைதல் :
வேண்டத்தக்கது அறிந்து வேண்ட முழுதுந் தருவோனாகிய
சொக்கநாதப் பெருமான் மறுநாள் கனவில் எழுந்தருளி 'திருக்கயிலாய பரம்பரை - திருநந்தி மரபு
மெய்கண்ட சந்தான வழியில் திருவாரூரில் விளங்கும் கமலை ஞானப்பிரகாசர் என்ற
ஆசாரியரிடத்தில், வருகிற சோமவாரத்தில் ஞானோபதேசம் பெற்று நம்மைப் பூசிப்பாயாக' என அருளினார்.
அன்றிரவே கமலை ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளி, 'ஞானசம்பந்தன் வருகிற சோமவாரத்தன்று
வருவான்; அவனுக்கு ஞானோபதேசம் செய்து சிவபூசையும் எழுந்தருளுவிப்பாயாக' என்று அருளினான்.
ஞானசம்பந்தர் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருவாரூர் சென்று, பூங்கோயிலில் உள்ள
சித்தீச்சரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்திருந்த கமலை ஞானப்பிரகாசரைக்
கண்டார். காந்தம் கண்ட இரும்புபோல ஆசாரியரால் ஈர்க்கப்பட்டார். சமய விசேட நிர்வாண
தீக்ஷைகளால் பாச ஞானம் பசுஞானங்கள் நீங்கிப் பதிஞானம் கைவரப் பெற்றார். சொக்கநாதப்
பெருமானை ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாகப் பூசிக்கப்பெறும் பேற்றையும், ஞான அநுபூதியையும்
அடைந்தார்.
கைவிளக்குப் பணிவிடை :
பன்னாளும் ஆசாரியப் பணிவிடை செய்து தங்கி இருக்கும்
நாள்களில் ஒருநாள் தியாகராசப் பெருமானின் அர்த்தயாம பூசையைத் தரிசித்து ஆசாரியர் தமது
மாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது கைவிளக்குப் பணியாளன் உறங்கிவிட ஞானசம்பந்தர்
தமக்கு ஞான ஒளியேற்றி நல்வழிகாட்டிய ஞானாசாரியருக்கு ஒளிவிளக்கு ஏந்தி முன்சென்றார்.
திருமாளிகையின் வாயில் முன்னர்ச் சென்றவுடன்,
|