திருநாவுக்கரசர் அருளிய
திரு அங்கமாலை
திருச்சிற்றம்பலம்.
தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து
தலையாலேபலி தேருந்தலைவனைத்-தலையேநீ வணங்காய். கண்காள் காண்மின்களோ-கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசிநின்றாடும் பிரான் தன்னைக்-கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ-சிவன் எம்இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும் -செவிகாள் கேண்மின்களோ.
மூக்கே நீ முரலாய்-முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை-மூக்கேநீ முரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய்-மதயானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை-வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை-நெஞ்சே நீ நினையாய்.
கைகாள் கூப்பித் தொழீர்-கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்-கைகாள் கூப்பித்தொழீர்.
ஆக்கை யாற்பயனென்-அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றிஎன் னாதஇவ்-ஆக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென்-கறைக் கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்-கால்க ளாற்பயனென்.
உற்றார் ஆர்உளரோ-உயிர் கொண்டு போம் பொழுது
குற்றா லத்துறை கூத்தன் அல்லால் நமக் குற்றார் ஆர்உளரோ.
இறுமாந் திருப்பன் கொலோ-ஈசன் பல்கணத் தெண்ணப் பட்டுச்
சிறுமான் ஏந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்(கு)-இறுமாந் திருப்பன்கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன்-திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே-தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம். |