முகவுரை

திரியேக தெய்வத்தின் திருவருட் பிரசாதமே பல ஹேதுக்களைக்
கொண்டு என்னுள்ளத்தில் ஆன்ம ஈடேற்றத்தின்மேல் அவாவையும்,
கவலையையு மூட்டி,

  'இருதலைக் கொள்ளி யுற்ற வெறும்மென வேகு மார்க்கம்
ஒருதலை யானுங் காணா துணங்கிய'

என்னை என் குடும்பத்தோடு இரக்ஷணிய பெருமானாகிய ஸ்ரீ கிறிஸ்து
பகவானுடைய திருவடிக்குக் கொத்தடிமையாகத் தடுத்தாட்கொண்டது;
இம்மட்டுந் துணை நின்று ஈடேற்ற வழியில் நடத்தி வருகின்றது.
அதுவே இரக்ஷாபெருமானின் திவ்விய காருண்யச் செயல்களை
எப்போ துஞ் சிந்திக்கவும், செந்தமிழ்க் கவிமாலை சாற்றி அவரது
திருவடிகளைத் துதிக்கவும் வேண்டுமென்கிற வாஞ்சையையும், என்
மனசிலழுந்திய இரக்ஷணிய சத்தியத்தை என் சுதேசிகளான

   'முத்த மிழ்த்துறை யின்முறை போகிய
 உத்த மக்கவிகட்கு'

ப்பணிவாய் வற்புறுத்திக் காட்ட வேண்டுமென்ற விருப்பத்தையும்,
என்னகத்தூன்றி, மேன்மேலாக வளர்த்து வந்தது, ஆதலின்,
இரக்ஷணிய வேதத்தின் உத்தர பாகமாகிய சுவிசேஷ சத்தியத்தையும்,
ஆங்கிலேய பக்த சிரேஷ்டனொருவர் இங்கிலிஷ் பாஷையில் வாசக
ரூபமாக, அதியுசிதமாக, வெகு விநயமாக, வரைந்து தந்த 'பில்கிரிம்ஸ்
புரோகிரஸ்' என்ற கிரந்தமொன்று அநேக பாஷைகளில்
மொழிபெயர்க்கப்பட்டு வழங்கி வருமாறு தமிழிலு
மொழிபெயர்க்கப்பட்டு வெகு காலமாய் இந்நாடடிற் பயன்பட்டு
வருகிற 'மோக்ஷப் பிரயாணம்' என்ற புஸ்தகத்தி லடங்கிய
அருமையான பொருளையும், அதன் கருத்தையுந் தழுவித் தேவ
கிருபையை முன்னிட்டு இரக்ஷணிய யாத்திரிகம் என்ற இந்தக்
காவியத்தைச் செய்யுட் பாவாக இயற்றத் துணிந்தேன்.

2. திருவருட் பலத்தால் என் உத்தியோக விஷயத்திற்
செலவிட்ட நேரம் போக மீந்த நேரங்களிலும், விசேஷமாய்
வியாதிப்பட்டிருந்த இராக்காலங்களிலும் உழைத்து இந்த
நூலைச்செய்து முடிக்க அருகனானேன். ஆரம்பந்தொடங்கி உத்தேசம்
ஆயிரஞ் செய்யுள் முடியுமட்டாக (பின்னே யெனக்கு ஜீவன்
கிடைத்தபோதிலும்) இந்த நூலைப் பூரணமாய்ப் பாடி முடிப்பேனென்ற
நம்பிக்கை கிஞ்சித்துமில்லாதிருந்தது. ஆனபோதிலும்,
அப்போதப்போது பாடி முடிந்தவற்றில், பாளையங்கோட்டையில்
மாஸந்தோறும் பிரசுரமாகிற 'நற்போதகம்' என்னும் பத்திரிகையில்,
கொஞ்சங் கொஞ்சம் அச்சிடுவித்து வந்ததினால், அம்மட்டில்
வித்வான்களான சில சிநேகிதர் வாசித்துப் பார்த்துத் தமிழ் நாட்டில்
இது பிரயோஜனப்படக்கூடியது; இளக்கரியாது பாடி முடிக்கவே
வேண்டும்' என்று பலவாறாய் வற்புறுத்திச்