Most Rev. Dr. S. மைக்கேல் அகஸ்டின்
புதுவை - கடலூர் பேராயர்.

வாழ்த்துரை

இறையருளைத் தேடி நிற்கும் அனைவருக்கும் எம் வாழ்த்துக்கள்.

“பொன்னும் பொருளும் போகமும் அல்ல நின்பால்
         அன்பும் அருளும் அறனும் மூன்றும்”

என்னும் பரிபாடலுக்கேற்ப, மருள்வழி நீங்கி அருள்வழியில் நின்று, என்றும்
இறைவனே எம்கதி என்று வாழ்ந்து விளங்கிடும் கவிதைக் கோமான்கள் 
எம் அன்பர் திரு. துரை-மாலிறையனையும், அவர்தம் துணைவியார் 
திருமதி சூரியவிசயகுமாரி அவர்களையும் அவர்தம் இலக்கியப் பணிகளையும்
வாழ்த்திப் போற்றுகின்றேன்.

தமிழில் காப்பியம் படைப்பது எளிதான காரியமல்ல. காப்பியத் தலைவரை
உணர்ந்தறிந்து காப்பியம் படைப்பது அதனினும் அரிதான செயல். மாறாக, 
நம் கவிதைத் தம்பதியரோ, வெவ்வேறு மதங்களைச் சார்ந்த சான்றோர்களை
முழுதும் உணர்ந்து அனைவரும் பிரமிக்கும் அளவில் காவியங்கள் யாத்து, 
சரித்திரம் படைத்துள்ளனர். காதற்கனிகள், நேரு காவியம், அம்பேத்கார் காவியம்,
அன்னை தெரேசா காவியம், பாவேந்தர் காவியம், மரியம்மை காவியம் ஆகிய 
ஆறு காவியங்களைப் படைத்துப் புகழும் பரிசும் பெற்றுள்ளனர்.

சமய நல்லிணக்க நெறியில் வாழ்ந்து, பணியாற்றும் இவர்கள், இன்று 
இசுலாமிய இலக்கியமாக “இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியத்தை”
2649 பாடல்களில் யாத்து, இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகத்
தமிழ்மக்கள் அனைவருக்குமுரிய பொதுச் சொத்தாக வழங்கியுள்ளனர்.

“ஆசிய மண்ணில் வீசிய ஒளியார் அரும்புகழ் முகம்மது நபியார் பேசிய
எல்லாம்” தொகுத்து வகுத்து வரலாற்றோடு இணைத்துத் தந்துள்ளமை சிறப்பான
ஒன்று.