7
முன்னுரை

ஒருவர   விரும்ப   மற்றொருவர்  விரும்பாதிருத்தல்; அல்லது  அறியாதிருத்தல்.
ஆகலான்,  இது  முற்றுப்பெறாத  காதல்  ஆகின்றது.  இருவரும் ஒருங்கியைந்து
முற்றுப்பெற்ற காதலே அன்பின்  ஐந்திணை ஒழுகலாறு.  இதனைத் திருவள்ளுவப்
பெருமான்,

"தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி"

என்றார்.  ‘விதை இல்லாத கனி‘   என்று  கனிந்து  கூறுவதை ஊன்றி நோக்குக.
ஐந்திணை: ஐவகை ஒழுக்கம். அவை: முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்
ஆகிய இருத்தல்,  புணர்தல்,  பிரிதல்,  ஊடல், இரங்கல் என்னும் நிகழ்ச்சிகளாம்.
இவைகள்   நிகழ   முன்   நிகழ்வதே கைக்கிளை. அதற்கு முதல்முதல் காணுதல்
வேண்டும்.  அது  தலைவன்  தலைவியைத்  தன்  கண்ணாற் காண்பது. இதனைக்
கோவைகளில்  துவக்கத்திலேயே  ‘காட்சி‘  என்ற  துறையமைத்துக்  கூறப்பெறும்.
அந்த முறையிலேயே எல்லாக் கோவைகளும் தொடக்கமுறுகின்றன.

கோவைகளுட்  சிறப்புடையதாக ஆன்றோரால் பண்டு தொட்டுப் பாராட்டப்
பெறுவது,  திருச்சிற்றம்பலக் கோவையெனப்  பெயரிய திருக்கோவையார்.  மற்றக்
கோவைகளைக்  குறிக்குங்கால்  உயர்வு  குறிக்கும்  ‘ஆர்‘   விகுதி   கொடுத்து
வழங்கினாரில்லை; இஃது    ஒன்றுக்கு     மட்டும்    அவ்விகுதி    கொடுத்து
அழைக்கப்பெறுவது அதன் சிறப்பியல்பு நோக்கியே.  அது சொல் பொருள் நயம்,
ஒப்பற்ற  இறைவனையே  தலைவனாகக்  கொண்டுள்ள  பண்பு  முதலியவற்றால்
சிறப்புற்றிருத்தலை ஓர்க.

இதில் தலைவன் தலைவியைக் கண்ட காட்சியை முதல் முதலாகத்,


2‘திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின் றதே‘

என்பதாம்.

1. திருக்குறள் : 1191.
        2. திருக்கோவையார் : 1.