அவை அடக்கம்


மாரிக்கு நிகர்என்று பனிசொரிதல் போலவும்,
   மனைக்குநிகர் என்றுசிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும், சந்த்ரன்முன்
   மருவுமின் மினிபோலவும்,

பாருக்குள் நல்லோர் முனேபித்தர் பலமொழி
   பகர்ந்திடுஞ் செயல்போலவும்,
பச்சைமயில் ஆடுதற் கிணையென்று வான்கோழி
   பாரிலாடுதல் போலவும்,

பூரிக்கும் இனியகா வேரிக்கு நிகர்என்று
   போதுவாய்க் கால்போலவும்,
புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
   பொருந்தவைத் ததுபோலவும்,

வாரிக்கு முன்வாவி பெருகல்போ லவுமின்சொல்
   வாணர்முன் உகந்துபுல்லை
வாலகும ரேசர்மேற்சதகம் புகன்றனன்
   மனம்பொறுத் தருள்புரிகவே.