செய்யுளில்  வண்டையர்க்கரசு  என்று  குறிக்கப்படுவது.  கருணாகரத்
தொண்டைமானையேயாம். வண்டையர்க்கரசு, முன்வரும் தொண்டையர்க்கரசு
என இயையும்.

இங்ஙனமே கருணாகரன் பல இடங்களிலும் 'வண்டையர்க்கரசு' என்றே
குறிக்கப்படுகிறான்.

i. 'மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
      திலகன் வண்டைநகர் அரசனே'

     

ii. 'அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
      அரசன் அரசர்கள் நாதன் மந்திரி'

     

iii. 'சுடர்ப்படைவாள் அபயன்அடி அருளி னோடும்
      சூடினான் வண்டையர்கோன் தொண்டைமானே'

 

என  வருமாறு  காண்க.   வண்டைநகர்  தொண்டைநாட்டில்  சிறந்த
நகரங்களுள்  ஒன்று போலும். இக்காலத்துச்சென்னைக்கு அண்மையில்  ஒரு
புகை வண்டி நிலையமாக விளங்கும்  வண்டலூர் வண்டைநகரா யிருக்கலாம்
போலும்.  அக்காலத்தே  வண்டைநகர்,  மல்லை  (மகாபலிபுரம்),   காஞ்சி,
மயிலை (மயிலாப்பூர்)  என்பன  சிறந்த  பட்டினங்கள்  என்பதும்,  அவை
அடங்கின  நாடே  தொண்டைநாடென்பதும்,  பல்லவன் காஞ்சியில் இருந்து
இந்நகரங்களை  கொண்ட   தொண்டைநாட்டை   ஆண்டுகொண்டிருந்தான்
என்பதும்   கருணாகரனை   நோக்கிப்   பேய்கள்  புகழ்ந்து  பாடினவாகக்
கூறப்படும்  கீழ்வரும்  செய்யுளால்  உணரப்படுகின்றது.

'வண்டை வளம்பதி பாடீரே
மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே'

என்பது அது.