'செறியும் அடவியி லோக ரந்தது
தெரிய அரிதெ னாவ டங்கவே'
|
எனக் கூறப்படுமாறும், கலிங்க வேந்தன் மறைந்தமை கேட்ட
கலிங்க வீரர்,
'வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்'
|
எனக் கூறப்படுமாறும் காண்க. இங்ஙனம் பலவிடங்களிலும்
வருகின்றன.
(1) 'கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை ஏற'.
(2) 'கயல் ஒளித்த கடுஞ்சுரம் போல'.
(3) 'கடலில் அடைந்தனர் செழியர்'.
(4) 'முடியினால் வழிபட்டு மொழிந்ததிறை இடாவேந்தர்
அடியினால் மிதிபட்ட அருவரைநூ றாயிரமே.'
|
இனி, மலைக்குவட்டில் படைசூழச் சென்றிருத்தல் சிறந்த
காப்பாகக் கருதப்பட்டது. போரில் அஞ்சியோடிய கலிங்க வேந்தன்
படைசூழ ஒரு மலைக்குவட்டைப் பற்றியிருந்ததால் இஃது உணரப்படும்.
காடு, மலை, கடல் முதலிய இயற்கை அரண்களைப்பெரிதும்
மதித்திருந்தனர் அக்காலத்திய அரசர். குலோத்துங்கன் கலிங்க
வேந்தனையும், அவன் நாட்டையும் கூறுங்கால்,
'எளியன் என்றிடினும் வலியகுன் றரணம்'
|
எனக் கூறுவதும், கலிங்க வேந்தன்,
'கானரணும் மலையரணும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தான்அரணம் உடைத்தென்று கருதாது
வருவதும் அத்தண்டு போலும்'
|
எனக் கூறுவதும் ஈண்டு நோக்கத் தக்கன.
|