இனிச்   சினங்கொண்ட   படைவீரர்   பகையரசர்   நாட்டுட்புகுந்து
எதிர்ப்பட்ட  ஆடவரையெல்லாம்  அழித்தலும்  அக்கால  வழக்கமாம்.

கலிங்கப் போர்க்களத்தே வென்றி கொண்ட வீரர்,

      'எழுகலிங்கத் தோவியர்கள் எழுதிவைத்த
சுவர்கள்மேல் உடல்அன்றி உடல்கள் எங்கும்
தொடர்ந்து பிடித் தறுத்தார்முன் அடைய ஆங்கே'

எனக் கூறப்படுமாறு காண்க.

போரிற்  பிடித்த  அரசர்களை  விலங்கிடலும்  அக்கால  இயல்பாகத்
தெரிகிறது.

'கதங்களிற் பொருது இறைஞ்சிடா
அரசர் கால்களில் தளையும்'

என வருமாறு காண்க.

பகைநாட்டிற்  பொருது பெரு  வென்றி கொண்ட அரசர் தாம் வென்ற
இடத்தே  வெற்றித்தூண்  நாட்டலும் அக்கால வழக்கமாம். கலிங்கப் போரில்
வென்றி  கொண்ட  கருணாகரன் ஆண்டு வெற்றித்தூண் நாட்டினன் என்பது,

'கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டி'

     

என்று  ஆசிரியர்  கூறுவதால் உணரப்படுகின்றது.  கடவுள் வாழ்த்தில்
குலோத்துங்கனைக்  குறிக்குமிடத்தும்,

  'திசையானைத் தறிகளாகச் சயத்தம்பம் பலநாட்டி'

என்று ஆசிரியர் கூறுமாறும் காண்க.

இனி,   அரசன்   பிறந்த  நாளை  மக்கள்  சிறக்கக்  கொண்டாடுவர்
என்பதும்,  அன்று  அரசன்,  மக்கள் மகிழ்ச்சி மிகுமாறு பல காரியங்களைப்
புரிவன்  என்பதும்  தெரிகின்றன. அந்நாள்   'வெள்ளணி'   நாள்  என்றும்
'நாண்மங்கலம்' என்றும்  பெயர் பெறும்.குலோத்துங்கன் ஆட்சியில் ஒருநாள்
போல    எந்நாளும்  மக்கள்  மகிழ்ச்சி  பெருக  இருந்தார்கள் என்பதாகக்
கூறும் ஆசிரியர்,