'எற்றைப் பகலினும் வெள்ளணிநாள்
இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே'

எனக்   குறித்து,  அரசன்    பிறந்தநாட்  கொண்டாட்டதில்  மக்கள்
மகிழ்ந்திருப்பதுபோல்  எந்நாளும்  மகிழ்ந்திருந்தனர்  என்றார்.

இனிப்  பேரரசர்  தங்கழலடைந்த  சிற்றரசர்க்கு  அஞ்சல் அளிப்பவர்
தம் அடியிணைகளை  அவர் முடிமீது  வைத்து அருள்  செய்தலும் அக்கால
இயல்பாம்.   குலோத்துங்கன்    காஞ்சியில்   சித்திரமண்டபத்தே   அரசர்
திறைகளைப்  பெற்றபின்,

'அரசர் அஞ்சலென அடிஇ ரண்டும் அவர்
முடியின் வைத்தருளி'

எனக்  கூறப்படுமாறு  காண்க.  இங்ஙனமே   பேரரசர்   யானைமீது
ஏறுங்கால்  தம்  அடியைச்  சிற்றரசர்  முடிமீது  வைத்து ஏறும் வழக்கமும்
உண்டாம்.

இனிப்,   பேரரசரின்    அமைச்சர்கள்   சிற்றரசர்களால்   பெரிதும்
மதிக்கப்பட்டிருந்ததோடு,      சிற்றரசர்கள்      அவ்வமைச்சர்களிடத்துப்
பணிவுடனும்  ஒழுகி  வந்தார்கள்  என்பது  தெரிகிறது.

'தார்வேய்ந்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையில்
பார்வேந்தர் படுகின்ற பரிபவம் நூறாயிரமே'

என வருமாறு காண்க.

இனி,    அக்கால    மக்களியல்பைக்   காண்போம்:   கண்துடித்தல்
முதலாம்   நற்குறி   தீக்குறி   கண்டு  பயன் உணர்தலும். ஆந்தை கூவல்
முதலிய    நிமித்தங்    கண்டு    பயன்    உணர்த்தலும்,   கனாப்பயன்
உணர்த்தலும்  அக்கால  மக்கள்  வழக்கத்திற்  கொண்டிருந்தனர்  என்பது
இவற்றைப்    பேயின்    மேல்   வைத்து   ஆசிரியர்    கூறியவாற்றால்
அறியக்கிடக்கின்றது.