மைகொண்டும்,  மந்திரம்  கற்றும்,  புதையல்  காண்போராயும், நோய்
தீர்ப்போராயும்  பார்வைக்காரர்  எனப்  பெயர்  பெற்றுச்  சிலர் இருந்தமை,

‘பார்வைப் பேய்’

என்னும் குறிப்பால் உணரப்படுகின்றது.

இறந்தார்  வீட்டுமுன்  நீண்ட  தாரை ஊதும்  வழக்கம்  பூண்டோராய்
'நோக்கர்'  எனப்  பெயர்  கொண்ட   ஒரு  வகையாரை,

'துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்
செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வார்என்னும்
நோக்கப் பேய்க்கு வாரீரே'

எனும் தாழிசை காட்டி நிற்கிறது.

நீண்ட  குழாய்  வடிவமான,  நீரைச்   சொரியும்   துருத்தி  என்னும்
கருவியைத்   தோளில்   கொண்டு   தொழில்   புரிவோர்  'துருத்தியாளர்'
எனப்பட்டனர் என்பது,

'வாளில்வெட்டி வாரணக்கை தோளில்இட்ட மைந்தர்தாம்
தோளில் இட்டு நீர்விடுந் துருத்தியாளர் ஒப்பரே'

 எனக் கூறுமாற்றால் உணரப்படுகின்றது.

காட்டில்  வேட்டையிற்  பிடித்துக்  கொணர்ந்த  காட்டுப்  பன்றியைத்
தொழுவில்  அடைத்து  அதைச்  சிலர் காத்து நிற்பதும் இயற்கையாம். படை
சூழ  மலைக்குவடு  பற்றியிருந்த  கலிங்க வேந்தனைப் படைகள் விடியளவும்
காத்து  நின்றமை  கூறியவிடத்து,

'தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி
தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல'

என இதனை உவமை கூறியவாறு காண்க.

இனி,  மகிழ்ச்சி   மிகுதியால்  ஆடையை   மேலே   வீசி   எறிந்து
விளையாடல் பண்டை மக்கள் இயல்பாம். பேய்கள்