விரித்துப்  பாடி, அப்  பேரரசனுக்குப்  புகழ்மாலை சூட்ட  விரும்பிய
இப்  பெரும்புலவர்  அப்  போர்க்களச்  செய்தியைப்  பாடுதற்கு  ஏற்றதாக
இப்   பரணி   நூல்   வகையை   மேற்கொண்டனர்,   பரணி   நூலாவது,
பெரும்போர்க்களத்தைப்  பெற்ற  பேய்கள்   பரணி  நாளில்  கூழ்  அட்டு
உண்டு  மகிழ்ந்து  அப்  போர்க்களத்  தலைவனை  வாழ்த்தி முடிப்பதாகப்
பாடப்படுவதாகும்.  பரணி  நாளே  முதன்முதலாக  அடுப்பில்  தீ  மூட்டிச்
சமைத்தற்கு  உற்ற  நாளாதலின்  பேய்கள்   பரணி  நாளில்  கூழ்  அட்டு
உண்பதாகக்  கூறப்படுவதாயிற்   றென்க.   இப்   பேய்கள்   வாயிலாகவே
போர்ச்செய்திகளும்   பிறவும்   அழகுபடக்   கூறப்படும்.   இக்கலிங்கத்துப்
பரணியின்  மேன்மையை  உணர்ந்தே,  ஒட்டக்கூத்தர்  தமது  தக்க  யாகப்
பரணியில்   இந்நூலைத் ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’  எனக்   கூறிப்
பாராட்டினர்  எனின்,  இதன்  பெருமையைச்   சொல்லவும்  வேண்டுமோ?
இப் பரணி,  நூல்  அமைந்து  கிடக்கும்  அடைவே அவற்றுள் காணப்படும்
நலத்தை  ஒருவாறு  ஈண்டுக்  காட்டுவாம்.

சயங்கொண்டார்  இப்  பரணி  நூலில்  குலோத்துங்கன்  வீற்றிருக்கும்
சிறப்பும்,   நால்வகைச்   சேனையுடன்   புறப்பட்டுப்   பயணம்   செல்லும்
இயல்பும்,    படைகள்    போர்க்கெழும்     தன்மையும்,     போர்புரியும்
பான்மையும்,    போர்க்களக்    காட்சியும்    பிறவும்    நம்    கண்முன்
காணுமாறு    சொல்லோவியத்தால்    அழகு    பெறத்    தீட்டுந்   திறம்
பெரிதும்  உணர்ந்து  மகிழத்  தக்கது.   நூன்முழுவதும்   பொருளணிகளும்,
சொல்லணிகளும்  மலிந்து  காணப்படுகின்றன.  பொருள்களின் தன்மைகளை
உள்ளன    உள்ளவாறு    எடுத்துக்    காட்டும்    தன்மை   நவிற்சியும்,
பொருள்களுக்குப்    பொருத்தமுற்ற    ஒப்புமைகள்    அமைந்து    அப்
பொருளின்   தன்மையை    விளக்கமுறுத்திச்    சொல்லும்    உவமையும்,
பொருள்களின்   இயல்பு   சிறந்து   தோன்றுமாறு   செய்ய  ஆசிரியர் தம்
குறிப்புப்பட   மொழியும்    தற்குறிப்பேற்றமும்,   கூறும்   பொருள் சிறந்து
தோன்றுமாறு   செய்யும்   இல்பொருள்   உவமையும், பொருளின் மேம்பாடு
தோன்ற