மொழியும்  உயர்வுநவிற்சியும்,  சொற்பொருள்  இருவேறு வகைப்பட்டு இன்பஞ்  செய்யும்  சிலேடையும்,  பல்வகைச்   சொல்லணிகளும்   பிறவும்
யாண்டும்  நின்று  நூற்பொருளை  விளக்கமுறுத்தி   நிற்கின்றன.  ஒன்பான் சுவைகளும்  பல  விடங்களில்  விளங்கித்  தோன்றி  இன்பஞ் செய்கின்றன. இடத்துக்கேற்ற  சந்தத்தை  அமைத்தும்  அழகு  செய்கின்றார்  ஆசிரியர்.

அவற்றுள், சொல்லோவியத்தால் தீட்டும் ஓர் ஓவியத்தைக் காண்க.

துயில்  நீங்கி  எழுந்தாள்  ஒரு  மங்கை,  துயிற்பொழுதில்   கூந்தல்
அவிழ்ந்து  கிடந்தது.  ஆடை  நெகிழ்ந்து  நின்றது துயில் நீங்கி எழுந்தவள்
ஒரு  கையால்  அவிழ்ந்து  நின்ற கூந்தலைத் தாங்கினாள். மற்றொருகையால் நெகிழ்ந்து  நின்ற  ஆடையைப்  பற்றினாள்;  அவ்வண்ணமே இரண்டோரடி எடுத்து  வைக்கின்றாள்.   துயில்நீங்கி   எழுந்தபோதும்    அவள்   முகம்
மலர்ச்சியுற்று   விளங்குகின்றது.   இக்காட்சியை   நமக்குக்   காட்டுகின்றார்
ஆசிரியர்;

'சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
ஒருகை கீழ்அலைசெய் துகிலொடே
திருஅ னந்தலினும் முகம லர்ந்துவரு
தெரிவை மீர்கடைகள் திறமினோ'

பொருள்களின்   இயல்பை   உள்ளது  உள்ளவாறு எடுத்துக் காட்டும்
தன்மை  நவிற்சி  அணிகள்  பல  இடங்களில்  சிறப்புற   அமைந்துள்ளன.
மகளிர்  நடந்து  செல்லும்  இயல்பை  ஒரு  தாழிசையில்  குறிக்கின்றார் :

'சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலிஎழ ஒலிஎழப்
பனிமொழி யவர்கடை திறமினோ'

மகளிர் கலவிப் போர்புரியுங்கால் அவர் இயல்பைக் கூறுமாறு காண்க.