முகப்பு தொடக்கம்

நல்லோர் வாழுநாடே நாட்டினுள் நனிசிறந்த நாடாகும் என்னும் கொள்கையுடையார் என்பதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
 அவலா கொன்றோ மிசையா கொன்றோ
 எவ்வழி நல்லவர் ஆடவர்
 அவ்வழி நல்லை வாழிய நிலனே"

(புறநா. 187)

எனவரும் அச் சங்ககாலத் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையார் அருண்மொழியே உணர்த்தும்.

பிற்காலத்தே தோன்றிய ஒளவையார் இத்தகைய சிறப்பினை இத்தொண்டை நாட்டிலே கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தார். மகிழ்ந்ததோடன்றி இச்சிறப்பினை "என்றும் கிழியாத" தம் பாட்டொன்றிலே சேர்த்தும் வைத்தார். அத்திருநாட்டிலே தோன்றுந் திருவுடைய நம் கச்சியப்ப முனிவர் அச்செய்யுளைக் கண்டு உளம் பூரித்திருத்தல் வேண்டும். இவ்வாறு புலவர் பாடும் இத்தகைய ஒப்பற்ற புகழையுடைய இத்தொண்டை நாட்டிற்கு வேறு எந்த நாடுதான் ஈடாகவியலும் என்று இவர் பெருமை பேசிக்கொள்கின்றார். இதோ அவர் கூறுவதைக் கேளுங்கள் :

"மான்றவல் வினைகால் சீக்கும் வளங்கெ" தொண்டை நாடு
 சான்றவ ருடைத்தென் றோதுந் தகுமொழிக் கதிரான் மற்றை
 ஏன்றசீர் நாட்டின் சீர்த்தி யென்னுமீ னொளிமை யாப்ப
 ஆன்றசெம் பருதி யாயதனையதண் டகநன் னாடு"

(திருநாட், 8)

என்பது அம்முனிவர் கூற்று. இதனோடு அந்த ஒளவையார் பாடிய அரிய செய்யுளையும் காண்பாம். அது வருமாறு :

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
 சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
 தென்னாடு முத்துடைத்துச் செப்பலரு நற்றொண்டை
 நன்னாடு சான்றோ ருடைத்து"

என்பதாம். செப்பேட்டிற் செதுக்கி வைத்தாலும் கல்லில் உளி கொண்டு பொறித்து வைத்தாலும் இந்தச் சீர்த்தி ஒருகாலத் தழிந்துபோதல் ஒருதலை. அந்தத் தமிழ்க் கிழவி தன் பாட்டிற் பொதிந்து வைத்தமையால் இப்புகழ் இந்நாட்டிற்குத் தமிழ்மொழி யிருக்குங் காலமெல்லாம் நின்று நிலவுமே! இத்தகைய புகழ்க்கு முன்னே ஏனைய நாட்டின் புகழ்களெல்லாம் ஞாயிற்றொளியின் முன்னே நாண்மீன்களின் புல்லொளி மறைவதுபோல மறைவனவாம் என்கின்றார் இப்புலவர் பெருமான்.

இனி, கச்சியப்ப முனிவர் இச் செய்யுளைப் பாடியபொழுது செந்தமிழ்க்கடலன்ன ஒளவையாரின் பாட்டொன்று அவர் நினைவில்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்