முகப்பு தொடக்கம்

குறை தீர்த்தற்பொருட்டு முருகப் பெருமான் அருளாலே இத் தணிகை நகரத்திலே மறுவலும் பிறந்து அவ்விறைவனருளாலே அந்தப் பெயரையே பெற்று இத் தணிகைப் புராணத்தையும் இயற்றி இதன்கண் இக் களவுப் படலம் பாடித் தங்குறை தீரப் பெற்றனரோ? என்று யாம் கூறத் துணிகின்றோம். கச்சியப்ப முனிவர் அத்துணைத் தமிழார்வம் உடையவர் என்னும் எம் கருத்துணர்த்தவே யாம் இவ்வாறு கூறினேம். எம் கூற்று இருபெரும் புலவர்க்கும் ஏற்றங் கூறுங் கூற்றேயாம்.

இனி இப் புலவர் பெருமான் இவர்க்கு முன்சென்ற சான்றோர் நெறியையே மேற்கொண்டு கோவைக் கலித்துறை யென்னும் செய்யுளால் விரித்துக் கூறுகின்ற இக் களவுப் படலத்தின்கண் இவர்க்கேயுரிய கற்பனை நயங்களையும் நுணுக்கங்களையும் ஈண்டு விரித்துக் கூற அஞ்சுகின்றேம். அவற்றை நாநலம் பெற ஓதி ஓதி இன்புறுதலே நன்றாகும்.

(16) வள்ளிநாயகி திருமணப் படலம்

அடுத்து வருகின்ற இப்படலம் அகத்திணைக் கைகோள் இரண்டனுள் இரண்டாவதாகிய கற்பு என்னும் கைகோளின் பாற் படும் என்பது கூறாமலே பெறப்படும்.

(17) விடையருள் படலம்

(18) நாரதன் அருள்பெறு படலம் என்னும்

இறுதியினின்ற இரண்டு படலங்களும் அகப்பொருளின் பாலே
அடங்குவனவாம்.

இதுகாறும் கூறியவாற்றால் இந்நூலைக் கற்போர் தாமும் இந்நூலை இன்னவாறு ஆராய்ந்து கற்றுப் பயன் பெறுதல் வேண்டும் என்று ஒருவாறு ஊக்குவதே எம் கருத்தாகும். இந்நூல் தரும் இன்பத்தையும் பயனையும் யாவரே முழுதுறக் கூறவல்லுநர் ஆவர். ஆகவே யாமும் இப்பணியை இவ்வளவின் நிறுத்தி வேறு பணியிற் புகுதற்கு அத்தணிகைத் தண்டமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமான் திருவருளை,

"காக்குங் கடவுள் கரந்து சிலம்பனாய்
 வாக்குங் கரக மணிநீர் கரத்தேற்றுப்
 பூக்கும் பொலங்கொம்பனையாட்கு அருளின்பம்
 தேக்கும் தணிகைச் சிலம்பற் றொழப் பெற்றேம்
 சீந்தும் வினையும் செருக்கும் விடை கொண்ட"

என்று பாராட்டி விடை கொள்கின்றேம்.

வாழ்க செந்தமிழ்! வளர்க கச்சியப்ப முனிவர் வண்புகழ்!

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்