பிறகு ஆனைதண்டாபுரத்திலும், பின்னர் முடிகொண்டானிலும் சிலகாலம் தங்கியிருந்தார்.
அப்பால் தமது முப்பதாவது வயதில் இவர் மாயவரம் சென்று, அங்கிருந்த
கோவிந்தய்யர் சுவாமி என்னும் பெரியார் ஒருவரிடத்து வடமொழியும்,
வேதாந்தசிந்தாந்த சாஸ்திரங்களும் கற்றுவந்தார்.
   
  * “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
       நிற்க வதற்குத் தக.”
 
என்ற பொய்யாமொழியைக் கோபாலகிருஷ்ண பாரதியார் மெய்யுறப் பின்பற்றினர். தமது
ஞானாசாரியராகிய கோவிந்தய்யர் சுவாமி தமக்குப் போதித்த வேதாந்த சித்தாந்த
சாஸ்திரங்களால் குடும்ப வாழ்க்கையின் இடும்பைகளைப் பாரதியார் தெளிவாய் அறிந்தார்.
பிறகு குடும்பவலையிற் சிக்குண்டு அல்லற்பட அவர் இசைந்திலர். ‘சம்சாரம் சாகரம்’
என்பதை நன்குணர்ந்தும், அதில் விழுவது, விளக்கைக் கையிலேந்திக் கொண்டு குழியில்
விழுவதை யொக்குமன்றோ? பாரதியார் தமது மனவுறுதியால் சம்சாரபந்தத்திற்
கட்டுப்படாது தமது ஆயுள்காலம் முற்றும் பிரமசாரியாகவே இருந்தனர்.
 
இவர் தாம் கற்கவேண்டிய நூல்களைக் கற்றபிறகு,
 
  “எய்தற் கரிய யாக்கைதனக் கெய்திற் றென்றா லதுகொண்டு
 செய்தற் கரிய வறங்கள்பல செய்து துயர்கூர் பிறவியினின்
 றுய்தற் குரிமை பெறவெண்ணா துழல்வோ னுடம்பு பொற்கலத்திற்
 பெய்தற் குரிய பால்கமரிற் பெய்த தொக்கு மென்பரால்.”
 

என்றபடி, மானிட யாக்கையாற் பெறும் பயன் பிறர்க்கு உதவிசெய்தலே என்னும் உண்மையைக் கடைப் பிடித்துத்

______________________

* திருக்குறள்.    # பிரபுலிங்கலீலை