செய்தக்காதி நொண்டி நாடகம்

நூலாராய்ச்சி

அவ்ரங்குசேபு ஆலம்கீர் பாத்ஷாஹ் முகலாயப்பேரரசர் தென்னாடு
முழுமையும் ஒரு குடையின்கீழ்க் கொண்டு வர எண்ணி, பீஜப்பூர்,
கோல்கொண்டா முதலிய நாடுகளின் மீது படையெடுத்தார். முகலாயச்
சேனைகள் அடுத்தடுத்து இந்நாடுகளைத் தாக்கின. அதனால், பீஜப்பூர்
ராஜ்யம் வீழ்ந்தது. கி. பி. 1687-ஆம் ஆண்டில் கோல்கொண்டா பிடிபட்டதும்,
தக்ஷிணத்தில் அவர் வேலை மிக்க வெற்றியுடன் நிறைவேறியது. அக்பர்
பாத்ஷாஹ் காலமுதல் முகலாயப்பேரரசர்கள் கண்ட பேரரசுக் கனவு
உண்மையாயிற்று. தக்ஷிணத்தில் முகலாயருக்கு விரோதமாக எந்த முஸ்லிம்
அரசும் இல்லை. தென்கோடி தவிர இந்தியா முழுவதும் முகலாயத்
தனிக்குடையின்கீழ் வந்தது, என்று அவ்ரங்குசேபு நினைத்தார்.

அவையெல்லாம் உண்மையாயிருப்பினும், மராட்டியரால் விளையக்
கூடிய துன்பத்தை அவ்ரங்குசேபு சக்ரவர்த்தி சரியாகக் கணக்கிட்டு
அறிந்துகொள்ள முடியவில்லை. மராட்டியர் தலைநகரம் தம்வசமானதனாலும்,
அரச வமிசத்தார் பலரையும் தாம் சிறைப்படுத்தியதனாலும், மராட்டிய அரசே
வீழ்ந்து விட்டது என அவர் தீர்மானித்தார் போலும் ! ஆனால், எதிரியின்
முழுவன்மையையும் அவர் மேலும் உணர வேண்டியவராய் இருந்தார்.

கி. பி. 1689-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பாத்ஷாஷ் அவர்களின்
கட்டளைப்படி சாம்பாஜி தூக்கிலிடப் பட்டார். அச்சமயம் மற்ற முக்கியமான
மராட்டியத் தலைவர் அனைவரும் ராஜகட்டத்திற்குச் சென்றனர் ; அங்குச்
சாம்பாஜியின் மனைவியான எஸ்ஸு பாய் என்பவளுடன் ஆலோசனை செய்து,
அவளுடைய ஆறுவயதுள்ள மைந்தனை ஸாஹு என்னும் பெயருள்ளவனுக்குப்
பட்டம் சூட்டி, அவனுக்குப் பிரதி