நெருஞ்சில்முள் உடம்புமுழுவதும் குத்தினது. அதையும் பொறுத்துக்கொண்டு உருண்டு செல்லும்பொழுது ஒரு சேற்றுக்குழியில் திடீரென்று சொதுக்கென விழுந்தேன். அங்குத் துலைக்குழிக்கழுதைபோற் கிடந்தேன்.
நான் விழுந்த சத்தத்தைக் கேட்ட காவலாளிகள் என்னைச் சூழ்ந்தார்கள்; பலவாறு திட்டினார்கள். பின்னர் நான் சேற்றுக்குழியினின்றும் தூக்கிவிடப்பட்டேன். என் உடலை நான் கழுவிக்கொண்டபின்னர்க் காவலாளிகள் என்னைத் தலையாரிமுன் கொண்டுபோனார்கள். அத் தலையாரியின் கட்டளைப்படி சுந்தர மகராயன் துரையின் சமுகத்துக் கென்னை அழைத்துச்சென்றார்கள். நான் செய்த குற்றத்திற்கு என் கால் கைகள் துணிக்கப்படவேண்டுமென்னுந் தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. என்னைப் பலவித அவமானத்துக்காளாக்கினார்கள். பின்னர், என் கை கால்கள் துணிக்கப் பட்டன. ஆக்கினைக் களரிக்குள்ளே அயர்ந்து களை தாங்கி மூச்சொடுங்கி, நாக்கொடு வாய் குழறி நடுங்கிப் பதைபதைத் தொடுங்கிவிட்டேன்.
அச்சமயம், என்னைப் பலரும் பார்க்க வந்தனர். அவர்களுள் விசயரகுநாதப் பெரியதம்பியின் இளைய சகோதரர் ‘மந்தரத்திண்புயத்தான் கன துரை மாமு நயினார்ப் பிள்ளை’ யும் ஒருவர். அவர் சென்னப்பட்டினத்திலிருந்து அங்கு வந்திருந்தார். அவர் எனது வரலாற்றைக் கேட்டு மனமிரங்கி வைத்தியச்செலவுக்குப் பொருள் கொடுத்து உதவியது மன்றி, சுகமடைந்தபின் கீழக்கரைக்கு வந்தால் என் வறுமை தீரும் என்று சொன்னார்.
சில நாட்களுக்குள் என் உடலிலிருந்த காயங்கள் ஆறின. மாமு நயினார்ப்பிள்ளை கொடுத்த பணத்தைக் கொண்டு ஒரு குதிரை வாங்கி, அதன்மீதேறிக் கீழக்கரைக்குப் பிரயாணமாகி அவ்வூருக்கருகில் செல்லும்போது சிங்காரத்தோப்பு, ஏகாந்தர் மடம், பள்ளிவாசல் முதலியன கம்பீரமாகக் காட்சியளித்தன. பின்னர், விசய ரகுநாதப் பெரியதம்பியின் வீட்டை அடைந்தேன். செஞ்சியில் என்னை ஆதரித்த மாமு நயினார்ப்பிள்ளை |