தமிழுக்கும்
வேறுபாடு இருக்கிறது. சென்னையைச் சேர்ந்தவர்கள் பேசும் தமிழும் வேறுபட்டதாக உள்ளது.
சென்னைச் சுற்றுப்புறங்களில் உருது, தெலுங்கச் சொற்கள் பேச்சு வழக்கில் மிகுதியாக
உள்ளன; ஆங்கிலச் சொற்கள் மிகுதியாகக் கலக்கின்றன. ஒலிகளிலும் இப்படிப்பட்ட
வேறுபாடுகள் உள்ளன. திருநெல்வேலிப் பகுதியில் ச என்ற மெய் நன்கு ஒலிக்கப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் வடக்குப்பகுதியில் அது சொற்களில் முதலில் வரும்போது ஸ என்றே
ஒலிக்கப்படுகிறது. தமிழின் சிறப்பெழுத்தாகிய ழ ஒவ்வொரு வட்டாரத்தில் ஒவ்வொரு
வகையாகத் திரிக்கப்படுகிறது. தெற்கு வட்டாரங்களில் அது ள எனவும், சேலத்தைச் சார்ந்த
பகுதிகளில் ய எனவும், சென்னைப்பகுதிகளில் இருவகையாகவும் ஒலிக்கப்படுகிறது. இழு என்பதை
இசு என்பாரும் உண்டு. பேச்சு மொழியில் வாழைப்பழம் என்பதை வாளப்பளம், வாயப்பயம்
என்று ஒலிக்கும் முறைகள் கற்றவர் விரும்பத்தக்கனவாக இல்லை. இருக்கிறது என்ற சொல்
சில வகுப்பினரால் இருக்கு என்றும், வேறு சில வகுப்பினரால் இருக்குது என்றும், படிப்பு
வாசனை இல்லாத சிலரால் கீது என்றும் ஒலிக்கப்படுகிறது. செய்துவிட்டார் என்பதன்
பேச்சு வடிவங்கள் செய்துட்டார், செய்ஞ்சிட்டார், சேஞ்சிட்டார், சேஞ்சிபுட்டார்
முதலியனவாக உள்ளன. எடுத்துக்கொண்டான் என்பது எடுத்துக்கினான், எடுத்துக்னான், எடுத்துக்கிட்டான்
முதலியனவாக ஒலிக்கப்படுகிறது.
இலங்கையில்
பேசப்படும் தமிழில் சில சொற்களுக்குப் பொருளே வேறுபடுகிறது. ஆறுதலாக என்பது அமைதியாக,
காலதாமதமாக என்ற பொருளில் அங்கு வழங்கப்படுகிறது. பேசிக்கொண்டிருப்போம் என்பதற்குக்
கதைப்போம் என்று சொல்கிறார்கள். திருமணத்தைச் சடங்கு என்கிறார்கள். நிறைய
என்பதைக் கனக்க என்கிறார்கள். நன்றாக என்பதை வடிவாய் என்கிறார்கள்.
பிறசொல்
கலப்பு
ஐரோப்பிய
மொழிகளிலிருந்து கடன்வாங்கிய சொற்களையும் இலங்கைத் தமிழர் வேறு வேறு வடிவில்
திரித்து வழங்குகிறார்கள். பன் (Bun) பான் என எழுதப்படுகிறது. காப்பி (coffee)
கோப்பி ஆகிறது. கோர்ட் (court) கோட் என எழுதப்படுகிறது. ஷர்ட் (shirt) சேட்
என்று எழுதப்படுகிறது. டார்ச் (torch) ரோச் ஆகிறது. டவல் (towel) துவாய் என்று
எழுதப்படுகிறது. இவ்வாறு எத்தனையோ ஐரோப்பியச் சொற்களை இலங்கையில் தமிழ் வடிவங்கள்
போலவே திரித்துப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலச் சொற்களும் இந்திச் சொற்களும் தமிழ் நாட்டின் தமிழர்களின் பேச்சில்
- வடக்குப் பகுதியாரின் பேச்சில் - கலந்து
|