பக்கம் எண்: - 89 -

பகுதியில் கண்ணகியைப்பற்றிய நாட்டுப்பாடல்கள் பல உள்ளன. தமிழ்நாட்டில் பிற்காலத்தில் அந்தக் கதை பலவகையாகத் திரிந்து வைசிய புராணத்தில் ஒரு பகுதியாக அமைந்தது. கோவலன் நாடகம் என்ற பழைய நாடகத்திலும் அந்தக் கதை பல திரிபுகள் அடைந்துள்ளது.

பத்தினி வழிபாடு

கண்ணகியின் வாழ்க்கை தமிழ்ப்பெண்களின் வாழ்விலும் அம்மன் கோயில்களிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கண்ணகி கொதித்து எழுந்து பாண்டியனிடம் தன் கணவன் கள்வன் அல்ல என்பதை நிறுவி ஊரைத் தீக்கு இரையாக்கிய நாள் வெள்ளிக்கிழமையாகும். இன்றுவரையில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை மிகப் புனிதமான நாளாக இருந்து வருகிறது. கண்ணகி தன் காலில் பொன்னாலான சிலம்பு அணிந்து இருந்தாள். கண்ணகி பொன் சிலம்பின் தெய்வமாகப் போற்றப்பட்டப் பிறகு, தமிழ்ப்பெண்கள் காலில் பொன்னாலாகிய எந்த நகையும் அணிவதை விட்டுவிட்டார்கள். வெள்ளி நகைகளை மட்டுமே காலில் அணிவது வழக்கம் ஆயிற்று. கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் நேர்ந்தது ஆடி மாதத்து வெள்ளிக்கிழமையில் ஆகும். இன்றும் தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதமும் வெள்ளிக்கிழமையும் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. மாரியம்மனுக்கு நடைபெறும் ஆடல் பாடல்களில் சிலம்பு முக்கிய இடம் பெறுகிறது. காளியே கண்ணகியாகப் பிறந்ததாகப் பிற்காலத்தில் கதை கட்டப்பட்டது. திரௌபதி கோயிலில் திருவிழா நடக்கும்போது, தீ மிதித்துச் செல்லுதல் ஒரு சடங்கு ஆகிவிட்டது. கண்ணகி மதுரையை நெருப்புக்கு இரையாக்கிய போது அந்தணர் அறவோர் முதலியவர்கள் தப்பித்துச் சென்றதாக உள்ள கதையை அது அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

இளங்கோவடிகள் பத்தினியைத் தெய்வமாக்கி வழிபடும் உணர்ச்சிக்குத் தம் நூலில் வித்திட்டார். இரண்டாம் காண்டத்திலேயே கண்ணகியின் வாழ்வு முடிகிறது. அவ்வாறு அவளுடைய வாழ்வு முடிந்த பிறகும், கோயில் எழுப்பிப் பத்தினி வழிபாடு நடைபெறுவதை அவருடைய காப்பியத்தில் மூன்றாம் பகுதியில் விரிவாகக் கூறியுள்ளார். சிலப்பதிகாரம் என்று அவர் தம் காப்பியத்திற்குப் பெயர் அமைத்தார். கண்ணகியின் கால் சிலம்பே நூலுக்குப் பெயர் தந்தது. அந்தச் சிலம்பை இளங்கோவடிகள் தம் நூலில் காட்டும் இடங்கள் மிகச் சிலவே. முதல் காண்டத்தில் முதல் காதையில் கண்ணகியின் திருமணத்தின்போது அவளுடைய காலில் சிலம்பைக் காண்கிறோம். பிறந்த ஊரை விட்டு மதுரைக்குச் செல்லவேண்டும் என்று கோவலன்