பக்கம் எண்: - 135 -

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
    மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
    கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியினை அடைந்தாள்
    செந்தழல் அடைந்ததுன் தேகம்
யானும்என் கவியும் எங்ஙனே புகுவோம்
    எந்தையே நந்தி நாயகனே.

[வானத்தின் சந்திரனை அடைந்தது உன் முகத்தின் ஒளி. உன் புகழ் தன்போல் பரந்த கடலை அடைந்தது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்த்தது. உன் கொடைவளம் மிகுந்த கைகள் கற்பக மரங்களை அடைந்தன. திருமகள் உன்னை விட்டுத் தன் நாயகனான திருமாலிடமே சேர்ந்துவிட்டாள். உன் உடம்போ நெருப்பிடம் சேர்ந்தது. இந்த நிலையில் உன்னைப் பிரிந்து யானும் என்னுடைய கவியும் எங்கே சென்று சேர்வதோ! எம் தலைனே! நந்திவர்ம மன்னவனே.]

தமிழலக்கியத்தில் ஏற்பட்டுவந்த புது வளர்ச்சியைத் தெளிவாகக் புலப்படுத்தியது இந்த நூல். கருத்தினைச் சொல்லும் முறையில் புதுமை, உணர்ச்சிக்கு ஏற்றவகையில் பாட்டின் ஓசையை அமைக்கும் முறையில் புதுமை, எல்லாவற்றையும்விடப் பொருளைத் தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் உயிருள்ளதாக அமைந்த எளிய நடையில் புதுமை இவை இந்நூலுக்குச் சிறப்புத் தருகின்றன. சிலப்பதிகார காலத்திலிருந்து தமிழிலக்கியம் வளர்ந்து வந்த தெளிவும் எளிமையும் கூடிய நடை இந்த நூலில் நிறைவு பெற்று விளங்கியது எனலாம்.

 படைப்புக்கு கட்டுபாடு

ஓர் அரசனை புகழும்போது ஒரே வகையான யாப்பினால் பல செய்யுள் இயற்றுவதைவிட, பலவகை யாப்புகளால் பல செய்யுள் இயற்றுவது சுவை மிகுந்ததாகும். புலவர் தாமே நேரே அரசனைப் புகழ்ந்து பாடுவதாகப் பல செய்யுள் இயற்றுவதைவிட, ஊரார் புகழ்வதுபோலவும், காதல் கொண்ட மங்கை ஒருத்தி அந்தத் தலைவனுடைய காதலுக்கு ஏங்குவது போலவும், ஊரில் உள்ள பிச்சைக்காரர் புகழ்வது போலவும், வீரன் ஒருவன் தன் தலைவனுடைய சிறப்பால் பெருமை பாராட்டிக்கொள்வதுபோலவும் இவ்வாறு வேறு பல துறைகள் அமைத்தும் செய்யுள் பல இயற்றுவது சுவைமிகுந்து காட்டும். இவ்வாறு பலவேறு யாப்பிலும் பலவேறு பொருளிலும் அரசனுடைய புகழை அமைத்துப் பாடிய செய்யுள்களைத் தொகுத்துக் கலம்பகம் என்ற பெயரால் ஒரு நூலாக அமைக்கும் எண்ணம் புலவர் ஒருவர்க்குத்