பக்கம் எண்: - 338 -

ஒளியிலே கேரள நாட்டு இளம் பெண்களுடனே அழகான தெலுங்குப்பாட்டுகளைப் பாடித் தோணிகள் ஓட்டி விளையாடுவோம் என்கிறார். கங்கை நதிக்கரையில் விளையும் கோதுமைப் பண்டங்களை வாங்குவதற்காகக் காவிரிக்கரையில் விளைந்த வெற்றிலையை விற்போம் என்கிறார். சிங்கம் போன்ற மகாராட்டிரப் புலவர்களின் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றிற்குப் பரிசாகத் தமிழ்நாட்டு யானைத் தந்தங்களை அளிப்போம் என்கிறார். காசியில் பேசும் புலவர்களின் பேச்சைக் கேட்பதற்காகக் காஞ்சிபுரத்தில் தகுந்த கருவிகளை அமைப்போம் என்று (வானொலி வருவதற்கு முன்) கனாக் கண்டார். ராஜபுத்திர வீரர்களுக்கு மைசூரில் கிடைக்கும் தங்கத்தை அளித்துப் போற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். வங்காளத்தில் கங்கையில் ஓடிவரும் வெள்ளம் மிகுதியாக இருப்பதால், அங்குள்ள ஊர்கள் அழியாதபடி செய்து, அந்த நீரைத் தெற்கே திருப்பி வறட்சியான மத்திய நாடுகளில் பயிர் செய்யவேண்டும் என்று பாடினார்.

தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் மிகுதியாகப் பாடப்படும் காவடிச்சிந்து என்ற உணர்ச்சி மிகுந்த இசைப்பாட்டு ஒன்று உண்டு. அந்த இசையில் அமையுமாறு ‘எங்கள் தாய்’ என்ற தேசீயப் பாடலைப் பாடினார். அதிலும் நாட்டுப்பற்றையும் நாட்டு ஒருமைப்பாட்டு உணர்ச்சியையும் வற்புறுத்தியுள்ளார்.

            தொன்றுநிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
                சூழ்கலை வாணர்களும் - இவள்
           என்று பிறந்தவள் என்றுண ராத
                இயல்பின ளாம்எங்கள் தாய்.

           முப்பது கோடி முகம்உடையாள் உயிர்
                மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
           செப்புமொழி பதினெட் டுடையாள் எனின்
                சிந்தனை ஒன்றுடையாள்.

           அறுபது கோடித் தடக்கைக ளாலும்
                அறங்கள் நடத்துவள்தாய் - தனைச்
           செறுவது நாடி வருபவ ரைத்துகள்
                செய்து கிடத்துவள் தாய்.

           நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
                நயம்புரிவாள் எங்கள்தாய் - அவர்
           அல்லவ ராயின் அவரை விழுங்கிப்பின்
                ஆனந்தக் கூத்திடு வாள்.

வங்காளத்தில் பங்கிம்சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய ‘வந்தே மாதரம்’ என்னும் பாடலை இருவகையாக அழகான தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் பாரதியார்.