பக்கம் எண்: - 339 -

பாரத நாட்டை ஒரு முழு வடிவில் கண்டு புகழ்ந்து பாடியது போலவே, அதன் உறுப்பாகத் தமிழ்நாட்டையும் போற்றிப் பாடியுள்ளார். ‘செந்தமிழ் நாடு’ என்ற பாடல் புகழ்பெற்றது.

           செந்தமிழ் நாடுஎனும் போதினிலே - இன்பத்
                தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
           தந்தையர் நாடுஎன்ற பேச்சினிலே - ஒரு
                சக்தி பிறக்குது மூச்சினிலே

என்ற அடிகள் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்துள்ளவை. அதன் எதுகைகள் ஆற்றலோடு உணர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. தமிழ் மொழியிடத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடும் ஆற்றல் மிகுந்தது. தமிழைப் புகழ்ந்து அவர் பாடியுள்ள பாடல்கள் இன்றும் மேடைகளில் இடையறாமல் ஒலிப்பவை. ஆங்கில மோகத்தில் மயங்கிக்கிடந்த தமிழர் உள்ளங்களில் தாய்மொழிப் பற்றை ஊட்டித் தட்டி எழுப்பியதில் பாரதியாரின் தொண்டு தலையானது எனலாம்.

பாரத நாட்டின் பழம்பெருமையையும் காலம் கடந்து வாழும் பண்புச் சிறப்புகளையும் வாயாரப் புகழ்ந்து பாடிய பாரதியார், இன்று வாழும் மக்களின் சிறுமைகளையும் மூட நம்பிக்கைகளையும் தவறுகளையும் கடிந்து கூறத் தயங்கவில்லை. குற்றங்களை அழுத்தமாக எடுத்து உணர்த்தும் பாடல்கள் பல உள்ளன. ‘நொண்டிச் சிந்து’ என்பதைப் பயன்படுத்தி அந்த மெட்டு அமைத்துப் பாடியுள்ளார் :

            நெஞ்சு பொறுக்குது இலையே - இந்த
                நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
           கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
                கோடி என்றால் அது பெரிதாமோ?

           ஐந்துதலைப் பாம்பு என்பான் - அப்பன்
                ஆறுதலை என்றுமகன் சொல்லிவிட்டால்
           நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
                நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

           சாத்திரங்கள் ஒன்று காணார் - பொய்ச்
                சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தை நம்பியே
           கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் - ஒரு
                கொள்கையின் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்.

குறைபாடுகள் உடைய பழைய சமுதாயத்தைப் போ போ போ என்று பழித்து அனுப்புகிறார்.