காப்பியங்களும்
அவர் பாடியவை. அவர்க்குக் கவிதைநடை இயல்பாக வந்து உதவுவது. உள்ளத்தைத் தொடும்
உணர்ச்சியோடு பலவகைப் பொருள்பற்றியும் பாடியுள்ளார். பாடலை ஒருமுறை இருமுறை படித்தவுடன்,
கவிஞரின் கற்பனை அவ்வாறே படிப்பவரின் நெஞ்சில் குடியேறிவிடும். உணர்த்தும் ஆற்றல்
திறம்படப் பெற்ற கவிஞராகையால், அவருடைய பாடல்கள் பலரிடையிலும் செல்வாக்குடன்
பரவியுள்ளன. தமிழ் இலக்கியத்தில் வளர்ந்து வந்துள்ள பழைய கருத்துகளை அவருடைய பாடல்களில்
புதிய இனிய வடிவில் காணலாம். காதல் கவர்ச்சிபற்றிப் பாடுவதில் அவர்க்கு ஆர்வம்
மிகுதி.
திருலோக சீதாராம், ரெட்டியார், துறைவன் முதலானோர் எளிய, இனிய நடையில் கவிதைகள்
இயற்றித் தந்துள்ளனர். என். எஸ். சிதம்பரம் இனிய கவிதைகளும் இசைப்பாடல்களும்
பாடியிருக்கிறார். ‘இதயக் கோயில்’, ‘தெய்வநலம்’ அவருடைய
நூல்கள், எஸ். டி. சுந்தரம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, புத்தனேரி சுப்பிரமணியம் ஆகியோரும்
நாட்டுணர்ச்சியும் கடமையுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் மிக்க பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
வாணிதாசன், கம்பதாசன் ஆகியோரின் பாடல்கள் புரட்சியான கருத்துகளையும் ஆழ்ந்த
உணர்ச்சிகளையும் வடித்துக் கொடுப்பன. அவர்கள் செய்யுள் வடிவில் கதைகளையும் கற்பனை
செய்து பாடியுள்ளனர். வாணிதாசனின் ‘தமிழச்சி’, ‘கொடிமுல்லை’,
‘தொடுவானம்’, ‘எழிலோவியம்’ ஆகியவை அப்படிப்பட்டவை.
‘சூரியனும் ஒரு தொழிலாளி’, ‘பிச்சைக்காரன்’ என்னும்
கம்பதாசனின் கவிதைகள் புதிய சமுதாயம்பற்றிய கனவுகள் உடையவை; உணர்ச்சியான நடையில்
எடுத்துரைப்பவை.
பழைய யாப்பில் கவிதைகள் இயற்றிப் புதிய உணர்வுகளையும் புரட்சிக் கருத்துகளையும்
ஊட்டுபவர் சிதம்பர ரகுநாதன். அவருடைய உரைநடைபோலவே, செய்யுளும் விறுவிறுப்பானது.
‘ஓய்ந்திருக்கமாட்டேன்’ என்னும் கவிதையை எடுத்துக்காட்டாக கூறலாம்;
‘வாடும் துன்பம் தீருமட்டும் ஓய்ந்திருக்கமாட்டேன்’ என்று எழுச்சியோடு
பாடல் அமைந்துள்ளது.
‘நாணல்’ என்ற புனைபெயருடன் அ. சீனிவாசராகவனும், ‘ஜோதி’
என்ற பெயரால் கி. வா. ஜகந்நாதனும் சிறந்த கவிதைகள் தந்திருக்கிறார்கள். அவர்களின்
பாடல்கள் பழைய மரபின்படி அமைந்தவை. பொருள்களும் வழிவழி வந்த பண்பாட்டை ஒட்டியவை.
முடியரசன் என்னும் கவிஞர் புலவர் மரபை ஒட்டிப் பாடல்கள் இயற்றியுள்ளார். ‘காவியப்
பாவை’ என்னும் அரிய பாடல்தொகுதியும் அளித்துள்ளார். தமிழ் உணர்ச்சி அவருடைய
கவிதைகளில் மேலோங்கி நிற்கும். சோமு, தத்துவக் கருத்தும் பக்தியும்
|