கீர்த்தனைகளும்
எழுதியுள்ளார். ஓர் அரிஜனர் அவர். ஏழைக் குடும்பங்களின் இன்னல்களை நன்றாக உணர்ந்து,
உள்ளம் உருக வறுமையின் கொடுமையைப் பாடியுள்ளார். ‘தீண்டாமைப் பேயே, இனி
தேசத்தில் உனக்கு இடம் இல்லை. ஒழிவாயே’ என்று பாடிய பாடல் பாராட்டத்தக்கது.
கிராமங்களில் ஏழைப் பெண்கள் குளித்த பிறகு மாற்றுடை இல்லாமல் அதே புடைவை உலர்வதற்காகப்
பாதி உடுத்துக் காத்திருக்கும் நிலைமை முதலியவற்றை உள்ளவாறே பாட்டாக வடித்துத் தந்திருக்கிறார்.
இவ்வளவு கொடுமைகளை எடுத்துக் கூறியபோதிலும், கவிஞரின் நெஞ்சம் காந்தி நெறியில்
ஊறியது ஆகையால், கொதித்து எழவில்லை; கொலைப்புரட்சியைத் தூண்டவில்லை. ‘நாட்டுப்புறங்களிலே’
என்ற பாட்டு, நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
தங்க நகைஏது? நல்ல
தண்ணீர் ஏது? வெளுக்க வண்ணம் செய்வோர் ஏது?
மங்கலப் பறை ஏது? வண்டி
மாடுஏது? காலில் சோடு ஏது? குடை ஏது?
செங்கல்லால் வீடு ஏது? மீறிச்
சிலருக்கு இருந்தால் வீணேகலகம் செய்து கட்டி
அங்கம் பதைத்திடவே பாவிகள்
அடித்திடுவார் அவரைத் துடித்திடவே அந்தோ.
அசலாம்பிகை அம்மையார் காந்திபுராணம் என்ற மூவாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுள் கொண்ட
காப்பியமும் திலகர் புராணமும் இயற்றினார். இக்காலத்திலும் காப்பியம் படைக்கும்
முயற்சி இன்றும் சிலரிடையே இருந்து வருகிறது. குழந்தை என்னும் புலவர் இராவணனைப் புகழ்ந்து
‘இராவண காவியம்’ என்ற செய்யுள்நூல் விரிவாக எழுதியுள்ளார்.
பழைய செய்யுள் வடிவங்களைக் கையாண்டு பக்திப்பாடல்களும் ‘திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ்’
முதலான நூல்களும் அளித்தவர் கே. எம். பாலசுப்பிரமணியம்.
ச. து. சு. யோகி புதுமை சில படைத்த கவிஞர். கம்பராமாயண நடையைப் பின்பற்றி அழகிய
பாடல்கள் இயற்றியவர். ‘பால பாரதி’ எனப் பெயர் கொண்டு, அவர் படைத்த
கவிதைகள் இலக்கிய நயம் நிரம்பியவை.
கவிஞர் கண்ணதாசன் சினிமாப் படத்துறைக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியவர். அவை
தவிர இலக்கியத்துறைக்காக அவர் பாடிய பாடல்களும் பல உள்ளன. ‘மாங்கனி’,
‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ என்னும் சிறு
|