பாவேந்தர் தமிழ், சமூகச் சீர்திருத்தம்,பொதுவுடைமை என்னும்
மூன்றிலும் உறுதியான பற்றுக் கொண்டவர். தாம் கொண்ட கருத்தை
வேண்டியவர் வேண்டாதவர் என்று கருதாமல் துணிச்சலாகச்
சொல்லுவதில் நிகரற்றவர்.இவருடைய எழுத்துக்களில் சிக்கியவர்களை
அவன் இவன் என்றும் சகட்டு மேனிக்குத் தாக்கி எழுதுவது
பாவேந்தர் வழக்கம்.ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்பால் கொண்ட
பெருமதிப்புக் காரணமாக ஒரு கவிஞனுக்கே உரிய சுதந்திரத்தோடு
எழுதுகிறார் என்று கருதிப் பதிலளிக்காமல் விட்டதும் உண்டு.
தொகுப்பாசிரியர் இளங்கோ முன்னுரையில் சில முதன்மைச்
செய்திகளில் ஒன்றாகப் பாவேந்தர் புதுவை மாநிலப் பொதுவுடைமை
இயக்கத்தின் மீதும் திரு.வ.சுப்பையா மீதும் காட்டிய வெறுப்பினைத்
தலையங்கத் தலைப்புக்களில் எடுத்துத் தந்து சுட்டிக் காட்டியுள்ளார்.
பொதுவுடைமை இயக்கத்தை எள்ளி நகையாடாதவர் சிலரே.
எள்ளல் வேறு; விமரிசனம் வேறு. ஆனால் வரலாற்று நெறிப்படிக்
காய்தல் உவத்தலகற்றிப் பரிசீலிப்பவர்கள அதற்கு உரிய பாராட்டினை
வழங்காமல் இரார்.பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் சுப்பையா
அவர்கள் எமது நிறுவனத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் இயங்கி
அருமையாகச் செயல்பட்டுச் சிறந்த வழிகாட்டியாக இலங்கியவர்.
பிரெஞ்சு ஆதிக்கத்தை இந்திய மண்ணிலிருந்து அகற்றிப்
பிரெஞ்சிந்திய
மக்கள் விடுதலை பெற அயராது உழைத்தவர். இந்தியத்
தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலை, பல்வேறு
உரிமைகள் பெற்று நலமுடன் இலங்குவதற்குத் தோழர்
வ.சுப்பையா அவர்களுக்குக் கடன்பட்டது. பிரச்சினைக்குரிய
தலைப்புகள் “குயில்” இதழில் வெளிவரும்போது தோழர்
வ. சுப்பையா உயிருடன் இருந்தார். இன்று இல்லை. இன்று
இருந்திருந்தால் பாரதிதாசன் தம்மையும் தம் இயக்கத்தையும்
கடுமையாகச் சாடக் காரணங்கள் இருந்தனவா,இருந்தன என்றால்
அவையாவை,இல்லையென்றால் உண்மை என்ன என்று விளக்கம்
பெறும் வாய்ப்பு எம் வெளியீட்டகத்திற்குக் கிட்டியிருக்கும். கடு சொல்
வீசும் தலையங்கங்கக் கட்டுரைகள் தீட்டியபின் தாமும் பாவேந்தரும்
புதுவை மக்கள் இயக்கத்தில் இணைந்து நின்று பணியாற்ற
எவ்வாறு முடிந்தது.பாவேந்தரிடம் நிகழ்ந்த மாற்றங்கள் தாம் யாவை
என்ற பல செய்திகளை எடுத்துச் சொல்லித் தெருட்டியிருப்பார்.
பாவேந்தர், சுப்பையா இருவர் மறைவும் இக்குறைவை நிறைவு செய்ய
முடியாததாக ஆக்கிவிட்டது.பாவேந்தருடைய திருமகனாரான மன்னர்
மன்னன் எழுதியுள்ள “கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்” என்ற
நூலில் இவ்வாறு கூறுகிறார். மக்கள் தலைவர் வ. சுப்பையா அவர்கள்
நான் எழுத்துத் துறையில் நிலைபெற உதவியவர்.அவரின் உதவிக்குத்
துணை நின்றவர் டாக்டர் என். ரங்கநாதன்”
|