முகவுரை

மொழிநூலின் வரையறை (Definition)

மொழிகள் தோன்றிய வகை, அவை வளர்ந்த முறை, அவற்றுள் ஒன்றோடொன்றுக்குள்ள தொடர்பு முதலியவற்றை விளக்கும் நூல் மொழிநூலாம் (Philology).

ஒரே மொழியிலுள்ள சொற்களை யெல்லாம் ஆராய்ந்து அவற்றின் பாகுபாடு, அமைப்பு, பிறப்பு, பொருளுணர்த்து முறை, திரிபு முதலியவற்றை ஆளும் நெறிமுறைகளை விளக்கும் நூல் சொல்லியல் நூலாம் (Etymology). ஆகவே, சொல்லியல் நூல் மொழிநூலின் உட்கூறாம். இவற்றுள், முன்னது பின்னதனுள் அடங்கும்; பின்னது முன்னதனுள் அடங்காது.

மொழிநூல் இன்னும் உருவாகாமை

மொழிநூலைப்பற்றி மக்களுக்கு இன்னும் சரியான உணர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படவில்லை. கணிதம், வானூல் முதலிய கலைகளைப்போல மொழிநூலும் ஒரு திட்டமான நெறிமுறைப்பட்ட கலையே. சிலர் மொழிநூலைச் சொல்லியல் நூலாகக் கொண்டும், சொற்களின் பிறப்பு வளர்ச்சிகளைப்பற்றிய நெறிமுறைகளை அறியாதும், ஒலி யொப்புமையும் பொருந்தப் புகலல் என்னும் உத்தியும்பற்றிச் சொற்கட்குத் தாறுமாறாய்ப் பொருட்காரணமும் மூலமும் கூறிவருகின்றனர். இதனால், மொழிநூலே ஓர் உன்ன அல்லது கற்பனைக் கலைதான் என்கிற முடிபைப் பலர் கொண்டுவிட்டனர். பலகலைகள் ஆய்வு (Empirical) நிலை கடந்து உருவாகிருந்தது. பனிமலை (இமயம்) தோன்றியதற்கு முன்பே அது தொன்முது நாடாயிருந்தது. தமிழ் வடக்கு நோக்கிச் செல்லச் செல்லச் சிறிது சிறிதாய்த் திரிந்து பின்பு திராவிடமாகின்றது. திராவிடமும் வடக்கு நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து பின்பு ஆரியமாகின்றது. திராவிடச் சொற்கள் ஐரோப்பா வரை சென்று இலத்தீன் கிரேக்கம் முதலிய முதுபெருமொழிகளிலும் கலந்துள்ளன. இந்தியாவின் பழங்குடிகள் திராவிடரே. இவற்றை நோக்கும்போது, தமிழ்ச் சரித்திரம் இந்திய சரித்திரத்திற்கும் இந்திய ஐரோப்பிய ஒப்பியன்மொழி நூலுக்குமே அடிப்படையாகு மென்பது புலனாம்.

தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றிய மொழியாதலானும், திரவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு முதற்றாயாகவும் இருத்தலானும், சொல்லியல் திறவுகோலையும் மொழிநூல் திறவுகோலையும் தன்னகத்தேயே கொண்டுள்ளது. தமிழ் திரவிடத் தாயென்பது இப் பாகத்தின் பிற்பகுதியிலும், தமிழ்ச் சொல்லாக்க முறைகள் `செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகள்' என்னும் நூலிலும் கூறப்படும்.
தமிழின் தலைமையை அறிதற்குத் தடைகள்