பதிப்புரை

தந்தை பெரியார்

அடிமைப்பட்டுக் கிடந்த சிறப்பு வாய்ந்த ஓர் இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லி நம்மைத் தமிழர்களாய்த் தலைநிமிர வாழவைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியாராவார்.
"குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்"

(குறள்.1028)

பொதுத் தொண்டு செய்ய முன்வரும் எவரும் மான அவமானம் பார்க்கக் கூடாது என்ற உணர்வோடு தமிழ்க்குடிக்குத் தொண்டு செய்து தமிழர்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர் தந்தை பெரியார்.
இவர் தோன்றியிராவிடில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற பெருமக்களின் தொண்டும், அரசியல் பணியும் தமிழர்களுக்குக் கிடைத்திரா. தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ்த்துறவி குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆற்றிய சமயப்பணியும், தமிழ்ப்பணியும் தமிழ்நாட்டில் வலம்வந்து நிலைத்திரா. தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், மொழிநூல் வல்லுநர் தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்களின் தனித்தமிழ் இயக்கத் தொண்டும், பணியும் மதித்துப் போற்றும் நிலை தமிழ்நாட்டில் வளர்ந்திரா. புரட்ப்பண் பாடிய பாவேந்தர் பாரதிதாசனின் மொழி, இன, நாட்டுணர்வும், பகுத்தறிவுக் கொள்கையும் தமிழ்மண்ணில் தழைத்தோங்கி இரா.பெரியார் பிறந்ததால் தமிழர்களாய் நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
தன்னலம் அணுவின் முனையளவும் இல்லாது தமிழர்களின் மேன்மைக்கு உழைத்த தந்தை பெரியாரை - மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக அவர் படைத்த நூல்களை வெளியிடும் இந்த நேரத்தில் பெரியாரின் பெருந்தொண்டை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.