xliv

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

மொழிநூல் வல்லுநர் பாவாணர்

மறைக்கப்பட்ட தமிழின வரலாற்றையும், சிதைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற மொழியையும், தமிழின் தொன்மையையும், அதன் செம்மாப்பினையும், தமிழர்களின் பெருமையையும் உலகறியச் செய்தவர் தொல்தமிழ் அறிஞர், மொழிநூல் வல்லுநர் பாவாணர் ஆவார். இவர் தமிழ்மொழி ஆய்விலேயே ஐம்பது ஆண்டுகள் மூழ்கித் திளைத்தவர். இப்படிப்பட்ட பேரறிஞர் ஒருவரைத் தமிழகம் இதுநாள்வரை கண்டதில்லை. தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைலையடிகளுக்குப் பிறகு தனித்தமிழ் இயக்கத்தை மரமாக வளர்த்தெடுத்துப் பலருக்கு நிழல் தந்தவர் பைந்தமிழறிஞர் பாவாணர் ஆவார். இவர் இலக்கண இலக்கியப் புலமையும், மொழிநூல் புலமையும், வரலாற்று அறிவும், நிலநூல், உயிர்நூல், மாந்தனூல் தேர்ச்சியும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற நுண்ணறிவாளர். தமிழின்பால் எல்லையற்ற அன்பும் தமிழைப் பண்டுபோல் புதுமொழியாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்ற உணர்வுமுடையவர். தமிழர்கள் தங்கள் வாழ்வு நலன்களைத் தேடி முன்னேறுவதற்குத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

உலகமொழி அனைத்திற்கும் நம் தமிழே மூலமொழி என்று பறை சாற்றியவர்; செந்தமிழ் மொழியின் செம்மாப்பினை தம் ஆங்கில அறிவால் நூலாக்கி உலக மொழிநூல் வல்லுநர்களின் வாயை அடைத்தவர்; தமிழ்மொழியின் வரலாற்றையும், வடமொழியின் வரலாற்றையும், தமிழர்களின் வரலாற்றையும், தமிழிலக்கியத்தின் வரலாற்றையும் தமிழர்களுக்குக் களஞ்சியமாய் விட்டுச் சென்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் மற்றும் பல தமிழ்ப் பெருமக்களால் போற்றிப் புகழப்பட்ட இப் பெருமகன் எழுதிய நூல்களை, மறுபதிப்புச் செய்து வெளியிடுவதன் வாயிலாகப் பள்ளிப்பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறைசென்ற நான் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறேன். என் கடமையைச் செய்தேன் என்ற மறஉணர்வும் நிறைவைத் தருகிறது.
தென்மொழியின் பங்களிப்பு
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தமிழின மேன்மைக்கு வித்திட்ட பெருமக்களின் உழைப்பை, தம் ‘தென்மொழி‘ இதழின் வாயிலாக இளமைக் காலத்தில் என் போன்றோர் உள்ளத்தில் விதைத்துத் தனித்தமிழ் இயக்கத்திற்கு எம்மை ஈர்த்த பெருமைக்கும் நன்றிக்கும் உரியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் தோன்றி யிராவிடில் குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது. எங்களைப் போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முடியாது. இவரால்தான் தமிழ்நாட்டிலும், உலக நாடுகளிலும் தனித்தமிழ் இயக்கம் இன்று நிலைபெற்று இருக்கிறது. இந்த நேரத்தில் நன்றியுணர்வோடு அவரை எண்ணிப் போற்றுகிறேன்; வணங்குகிறேன்.