பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்113முத்துவீரியம்

(வ-று.) அங்குக் கொண்டான்.

பிறவுமன்ன.

(வி-ரை.)

‘அந்நான் மொழியும் தந்நிலை திரியா’ (குற்றிய - 24)

என்பது தொல்காப்பியம். (253)

உண்டு

413. உண்டென் பெயரே யுண்மை செப்பின்
     இயல்பா தலுமீ றழிதலும் ணகாரம்
     ளகார மாதலு முரியன வாகும்.

(இ-ள்.) உண்டென்னும் பெயருண்மைப் பொருளைக் கூறின் இயல்பாதலு
மீறுகெடுதலும், ணகரமெய் ளகரமெய்யாகத் திரிதலுமுரியவாம்.

(வ-று.) உண்டுபொருள், உள்பொருள் எனவரும். (254)

இருதிசை புணர்தல்

414. இருதிசை புணரி னேயிடை வருமே.1

(இ-ள்.) இரண்டுபெருந் திசைகளுந் தம்மிற் புணரின் ஏகாரச் சாரியை இடையில்
வருமெனவறிக.

(வ-று.) வடக்கே தெற்கு; கிழக்கே மேற்கு. (255)

திசைப் பெயர்முன் திசையும் பிறவும்

415. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
     நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
     றகரம் னலவாத் திரிதலு மாம்பிற.2

(இ-ள்.) திசையொடு திசையும் பிறபெயரும் புணரின் நிலைமொழியிறுதி
யுயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெடுதலும், றகரமெய் னகரமெய் யாகவேனும் லகரமெய்
யாகவேனுந் திரிதலுமாம்.

(வ-று.) வடகிழக்கு, தென்மலை, மேல்பால். (256)

1. தொல் - எழுத் - குற்றிய - 26.

2. நன் - எழுத் - உயிரீற் - 36.