பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்58முத்துவீரியம்

கோட்படுதலும், கடிக்கப்படுதலுமாம், இவை இயல்பாகவும் உறழ்ந்தும் வந்தமை காண்க.

‘‘புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும்
அம்முறை இரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’’ (தொகை - 14)

என்பர் தொல்காப்பியரும். (37)

ஐகார வேற்றுமைத் திரிபு

197. வலிமிகும் வழிமெலி மிகுதலு மெலிமிகும்
     வழிவலி மிகுதலு மியல்பின் வழிமிகு
     தலுமுயிர் வழியுயிர் கெடுதலுஞ் சாரியை
     வரும்வழி சாரியை கெடுதலும் மெய்வே
     றாகிடத் தியற்கை யாதலும் பொதுப்பெயர்க்
     கவ்விய னிலையலு மையுரு பியல்பே.

(இ-ள்.) வன்கணம் மிகும்வழி மென்கண மிகுதலும்; மென்கண மிகும்வழி வன்கண
மிகுதலும்; இயல்பின்வழி மிகுதலும்; உயிர்வரும்வழி யுயிர்கெடுதலும், சாரியை வரும்வழி
சாரியை கெடுதலும், மெய்வேறாகிடத் தியற்கையாதலும், பொதுப் பெயர்க்குருபு தொகாதே
நிற்றலும் ஐயுருபினியல்பாம்.

(வ-று.) மரங்குறைத்தான், வலிவழிமெலிமிகல்; விளக்குறைத்தான்,
மெலிவழிவலிமிகல்; தாய்க்கொலை, இயல்பின்வழிமிகல்; தழூக் கொணர்ந்தான்,
உயிர்வரும்வழி உயிர்கெடல்; வண்டுகொணர்ந்தான், சாரியைவரும்வழி சாரியைகெடல்;
புளிகுறைத்தான், மெய்வேறாகிடத் தியற்கையாதல்; கொற்றனைக்கொணர்ந்தான்,
உருபுதொகாது நிற்றல் எனவரும். (38)

அல்வழியில் இ, ஐ

198. அல்வழி இ, ஐ முனரியல் பாதலு
     மிகுதலு முறழ்தலும் வேண்டப் படுமே.

(இ-ள்.) அல்வழிக்கண் இ, ஐ முன் க, ச, த, பக்கள் வரினியல்பாதலு மிகுதலும்,
ஒருகால் மிகுதலும் ஒருகால் மிகாமையுமாம்.