கைக்கிளையும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணையும் பெருந்திணையும் ஆக ஏழாகும். அகப்பொருள் கற்பித்து உரைக்கப்படும் புனைந்துரையும் உலக நெறியும் உரைப்பதாகும். கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம். ஐந்திணை என்பது அன்புடைய காமம். பெருந்திணை என்பது இசையாக் காமம். விளக்கம் : அறம் முதனான்கினில் வீடு சொலற்கு அரிது என்ற கருத்து திருக்குறள் பரிமேலழகர் உரையை ஒட்டி அமைந்திருக்கலாம். ‘வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின் துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவது அல்லது இலக்கணவகையால் கூறப்படாமையின் நூல்களால் கூறப்படுவன ஏனைய மூன்றுமேயாம்’ - பரிமேலழகர் உரைப்பாயிரம் (திருக்குறள் முதல் குறள்). இது நம்பியகப்பொருள் 1 முதல் 5 ஆம் சூத்திரங்களின் தழுவலாகும். 72. | திணைகுறிஞ்சி, பாலை,முல்லை, மருத(ம்),நெய்தல், ஐந்தாம்; செறியு(ம்)முதற்கரு, உரிஎன்றவைமூன்று பொருளாந்; துணைநிலமும், பொழுது(ம்)முதற் பொருளாகும்; வரையே சுரம்,காடு வயல்,திரைசேர் இடம்பத்து நிலமாம்; கனிபொழுது பெரும்பொழுது, சிறுபொழுதாம்; பெரிதே கார்,கூதிர், இரண்டுபனி, இருவேனில், ஆறாம்; அனைமாலை, யாமமே, வைகறையே, காலை அழற்றியநண் பகல்,எற்பாடு அறுவகைத்தாஞ் சிறிதே. [2] | இது திணை, முதல் ஆகியவற்றை விளக்குகின்றது. உரை : ஐந்திணை என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றாலும் ஐந்திணை கூறப்படும். இவற்றுள்,முதல் என்பது நிலம், பொழுது என இரண்டாகும். |