பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்536
மற்றவையும் போன்ற திருவருள் விளக்கம் யாருக்கும் எளிதில் பெற முடியாததாகும் என்றவாறு.
குகை நமச்சிவாயர் இவ்வாறு செய்தார் என்பர். புலவர் புராணத்தில் இவர் பெயரமைந்த சருக்கத்தின் 47 முதல் 52 முடிய உள்ள கவிகளில் இந்நிகழ்ச்சி கூறப்படுகிறது. இதற்கு முன் கூறப்பட்ட நான்கு நூற்பா நிகழ்ச்சிகளிலும் ஒருவனின் வெற்றி மற்றவனுக்குத் தோல்வியாயமைந்தது. தோற்றவன் துன்பமுற்றான், ஆனால் இந் நிகழ்ச்சியால் யாருக்கும் எந்த வகையான துன்பமும் இல்லை; மாறாகத் தன் ஆட்டை இழந்த பொதுவன் குட்டிகளோடு திரும்பப் பெற்று மகிழ்ந்தான்., இவ்வாறு தன் வெற்றியாலும் பிறருக்குத் தீமை செய்யாத கருணைமிக்க அருள் தன்மை எளிதில் அடைய முடியாதது ஆகும் என்பது கருத்து.
(780)
139,சீறி இகழ்வார் தெருத்தலை வாயில்
 தோறும் அலைவுறீஇச் சுழலும் பாவலன்
 செக்குஒரு கவியால் செம்பொன் ஆகப்
 பாடவும் செய்யும் பழுதுஇலா அருளே.
இந்நூற்பாவில் இடம்பெற்ற வரலாறு விளங்கவில்லை,
140.மன்னரும் வியப்ப மணிமுரசு அதிர்தரப்
 பொன்நெடும் சிவிகை ஏறிப் போய்வரும்
 நாவலன் நடந்து நாழிநெற் கூலி
 கருதி வாடிய காதைஒன்று உளதே.
அரசர்களும் கண்டு அதிசயிக்கும்படி இன்னியங்கள் முழங்கப் பல்லக்கில் பவனிவரும் இயல்புள்ள கம்பநாடன் ஒருசமயத்தில் கால்தேய நடந்து சென்று ஒரு நாழிநெல்லைக் கூலியாகப் பெறுவதற்காகச் சுவர் வைக்கும் பணியில் ஈடுபட்டான் என வழங்கிவரும் கதையும் உண்டு என்றவாறு.
“மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்; சொற்கொண்ட பாவின் சுவைஅறிவார் ஈங்கிலையே;