பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 135
 

இயற்பழிக்கும்; எங்ஙனம் இயற்பழிக்குமோ எனின், ‘இவளை இங்ஙனம்
ஆற்றாளாகப் பிரிந்த அவரினுங் கொடிய, இவளது ஆற்றாமை கண்டும்
அதற்கு நல்லது புரியாது தம் நாணின்மையாற் பகலே புகுந்து இரைதேர்கின்ற
நாணாப்பறவைகள் என்னும்: அதற்குச் செய்யுள்:

   ‘இகலே புரிந்தெதிர் நின்றதெவ் வேந்தர் இருஞ்சிறைவான்
   புகலே புரியவென் றான்கன்னி அன்னாள் புலம்புறுநோய்
   மிகலே புரிகின் றதுகண்டும் இன்றிவ் வியன்கழிவாய்ப்
   பகலே புரிந்திரை தேர்கின்ற நாணாப் பறவைகளே’         (209)

    என்பது கேட்ட தலைமகள், ‘என் ஆற்றாமை கண்டன்றே இவள்
இவ்வகை சொல்லுவாளாவது’ எனத் தனது ஆற்றாமை நீங்குவாளாவது பயன்.

      இனி, ஒருவழித்தணந்தவிடத்துத் தலைமகள் வேறுபட ‘இவ்வகைப்பட்ட
நிலத்தில் தலைமகன் நம்மைத் துறவான், நீ எற்றிற்கு ஆற்றாயாகின்றாய்?’
எனத் தோழி சொல்லியதற்குச் செய்யுள்:

   ‘அடுமலை போல்களி யானை அரிகே சரிஉலகின்
   வடுமலை யாதசெங் கோல்மன்னன் வஞ்சியன் னாய்மகிழ்ந்து
   படுமலை போல்வண்டு பாடிச்செங் காந்தட்பைந் தேன்பருகும்
   நெடுமலை நாடனை நீங்குமென் றோநீ நினைக்கின்றதே’      (210)

   ‘குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற்பாய
   அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென் றயல்வாழ்மந்தி
   கலுழ்வனபோல் நெஞ்சசைந்து கல்லருவி தூஉம்
   நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்’

எனக் கொள்க.                                                (25)


சூத்திரம் - 26


   வெளிப்படை தானே விரிக்கும் காலைத்
   தந்தை தாயே தன்னையர் என்றாங்கு
   அன்னவர் அறியப் பண்பா கும்மே.

என்பது என்னுதலிற்றோ எனின், மேல் வெளிப்படையே சொல்லிப் போந்தார்,
அவ் வெளிப்படை இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள்: வெளிப்படை தானே என்பது-களவு வெளிப்படை
தானே என்றவாறு; விரிக்குங் காலை என்பது-