| 
     
                              
     
     சூத்திரம்-30
 காம மிக்க கழிபடர் கிளவியும்
 காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும்
 ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவியும்
 இரவினும் பகலினும் நீவரு கென்றலும்
 கிழவோன் தன்னை வாரல் என்றலும்
 தன்னுள் கையா றெய்திடு கிளவியும்
 அன்ன மரபின் பிறவும் தொகைஇத்
 தன்னை அழிந்த கிளவி எல்லாம்
 வரைதல் வேட்கைப் பொருள என்ப.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், வரைவுகடாவும் இலக்கணமெல்லாம்
 தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
 
 மேலதனோடு இயைபு என்னையோ எனின், மேலுங் களவு நீக்கிக்
 கற்பாவதோர் இலக்கணம் உணர்த்தினார்: இவ் வரைவும் அன்னதாகலான்
 அதன் பின்னே வைக்கப்பட்டது.
 
 இதன் பொருள்: காமம் மிக்க கழிபடர் கிளவியும் என்பது - 
     காமம்
 என்பது வேட்கை, மிகுதல் என்பது பெருகுதல், கழி என்பது சிறத்தல், படர்
 என்பது நினைத்தல், கிளவி என்பது சொல், வேட்கைமிக்குச் சிறப்பச்
 சிந்தித்துச் சொல்லுஞ் சொல்லும் என்றவாறு; காப்புச் சிறைமிக்க கையறு
 கிளவியும் என்பது - காப்புச்சிறை மிகவினாற் கையற்றுச் சொல்லுஞ்
 சொற்களும் என்றவாறு; ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியும் என்பது - அவன்
 வரும் வழியது ஏதஞ் சிந்தித்து ஆற்றாளாய்ச் சொல்லுஞ் சொற்களும்
 என்றவாறு; இரவினும் பகலினும் நீ வருக என்றலும் என்பது -
 இரவின்கண்ணும் பகலின் கண்ணும் நீயிர் வந்து ஒழுகுவது ஆகாதோ எனச்
 சொல்லுஞ் சொற்களும் என்றவாறு; கிழவோன்றன்னை வாரல் என்றலும்
 என்பது-தலைவனை இரவின்கண்ணும் பகலின்கண்ணும் வரவேண்டா என்று
 சொல்லுஞ் சொற்களும் என்றவாறு; தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
 என்பது - தன்னுட் கையாற்றினை ஏதிலது ஒன்றின்மேலிட்டுச் சொல்லும்
 சொற்களும் என்றவாறு; அன்ன மரபிற் பிறவும் தொகைஇ என்பது - அன்ன
 இலக்கணத்த பிறவுந் தொகுத்து என்றவாறு; தன்னை அழிந்த கிளவி
 எல்லாம் என்பது - தன் ஆற்றாமையாற் சொல்லுஞ் சொல்லெல்லாம்,
 |