பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 151
 

       ‘அன்னமரபிற் பிறவும்’ என்றதனாற் பகற்குறிக்கண்ணும்
இரவுக்குறிக்கண்ணும் வந்து ஒழுகுந் தலைமகற்குத் தலைமகளும் தோழியும்
ஆற்றாத்தன்மையராய் வரைவு பயப்பச் சொல்லுஞ் சொல்லெல்லாங் கொள்க.
அக் கிளவி பல; அவற்றுட் சில வருமாறு:

                    
நிலைகண்டுரைத்தல்

  ‘நெய்ந்நின்ற வேல்நெடு மாறனெங் கோன்அந்தண் நேரியென்னும்
  மைந்நின்ற குன்றச் சிறுகுடி நீரைய வந்துநின்றால்
  கைந்நின்று கூப்பி வரையுறை தெய்வமென் னாதுகண்டோர்
  மெய்ந்நின் றுணர்ப எனினுய்யு மோமற்றிம் மெல்லியலே.’    (235)

  என்பது, ‘இரவுக்குறியிடத்து வந்து நின்றால், கண்டார் நும்மை முருகவேள்
என்று கருதாது, மெய்ம்மை உணர்பவாயின், இவள் பெருநாணினளாகலின்,
இறந்துபடுமே!’ என்னும்; அதுகேட்டுத் தலைமகன், ‘பெரியதோர்
இழுக்குடைத்தாக ஒழுகினேன்காண்’ என, அன்று ஒருவகையான் முற்பட்டுப்
பிற்றைஞான்று வரைவானாம்.

   இன்னும், ‘அன்னமரபிற் பிறவும்’ என்றதற்குச் செய்யுள்:

                   
படைத்து மொழிகிளவி

  ‘அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேளயல் வேந்திறைஞ்சும்
  பொன்னார் கழல்நெடு மாறன் குமரியம் பூம்பொழில்வாய்
  மின்னார் மணிநெடுந் தேர்கங்குல் வந்தின்று மீண்டதுண்டால்
  என்னா முகஞ்சிவந் தெம்மையும் நோக்கினள் எம்மனையே.’ (236)

        என்பது இரவுக்குறியின்கண் தலைமகன் சிறைப்புறத்தானாவதறிந்து
தலைமகட்குத் தோழி படைத்துமொழிந்து சொல்லியது. எங்ஙனமோ வெனின்,
‘நெருநல், ‘‘என்னை நீர் விளையாடுங் கானலிடத்து ஒரு தேர்வந்து
போயிற்று?’’ என முனிந்து என்னை முகநோக்கிப் போயினாள் அன்னை,
இன்னது கருதி யென்பது அறியேன்’ என்னும்; என, ‘ஒக்கும், யான் வந்து
ஒழுகுகின்ற ஒழுக்கம் புறத்தார்க்குப் புலனாயிற்றுப் போலும் எனப் பிற்றை
ஞான்றே வரைந்து புகுவானாம்.

      இன்னும், ‘அன்னமரபிற் பிறவும்’ என்றதற்குச் செய்யுள்:

  ‘பண்இவர் சொல்லிகண் டாள்தென்னன் பாழிப் பகைதணித்த
  மண்இவர் சீர்மன்னன் வாள்நெடு மாறன் மலயமென்னும்
  விண்இவர் குன்றத் தருவிசென் றாடியொர் வேங்கையின்கீழ்க்
  கண்இவர் காதற் பிடியொடு நின்ற கருங்களிறே.’          (237)