பக்கம் எண் :
 
221

ஐந்தாவது:-

அணியதிகாரம்.
PART V.- RHETORICAL EMBELLISHMENT.
 

301. கலையணிச் செல்வன் கமலச் சேவடி
தலையணி புனைந்து சாற்றுது மணியே.
 
     (இ-ள்.) அணியிலக்கணமாமாறுணர்த்துதும். வேதநூன்முத லெந் நூலு நலம்பெறக்
காரணமாக நிற்கு மெய்க்கடவுடன் றிருக்கமலபாதமெ னறலை யணியாகக்கொண் டேத்தி
யணிய திலக்கணநூலை விளக்குது மென்பதா யீற்றாகையின் முதலிடை யொப்பக்
கடையும் வழுவா திறைவன் காப்பதுவேண்டி யீண்டுந் தெய்வவணக்கம்
வந்தவாறுகாண்க. இவ்வதிகாரநூலைப் புலமையின் மிக்க தண்டியென்பவர்
விதித்துரைத்தமையா லவர் பெயர்கொண்டு தண்டியலங்காரமென்று வழங்கும். என்னை
- "மணமக ளணிநறு மாலை போலவுங், கனமிக மார்புறை கலனணி போலவு, மணி
சுவர்க் கெழுதிய வடிவுருப் போலவு, மற்புதத் தனுவுறுப் படைமரப் பாவை, பொற்புறத்
தீர்ந்த பொற்சுதை போலவுங், கற்றோ ருரைக்குங் கருத ரும் பொருட்கே, மற்றோ
ரணிதான் வழங்குமென் றுணர்க." அன்றியு மேனிறுத்த முறையான் முன்னோர்தந்
தவற்றுட் சிலவொழித்து மிகவுணர வேண்டியபலவற்றை விளக்கிச் செந்தமிழுணர்ந்தோர்
நூலிலொழிந்த சிற் சிலகூட்டி யுணர்த்துதும். இஃது சிறப்புப்பாயிரம். எ-று. (1)
 
302. அணியெனச் சொல்பொரு ளாமிரண் டவற்றுள்
வேற்றுரை வரக்கெடு மணிசொல் லணியுரை
மாற்றினுந் தோன்றிய வணிபொரு ளணியே.
 
     (இ-ள்.) இய - லிசை - நாடக - மென்னு முத்தமிழ்க் கலங்காரமாக வரு மணி
சொல்லானும் பொருளானும் வழங்குவதாகையிற் சொல்லணியென்றும் பொருளணியென்று
மணி யிருவகைப்படும். அவற்று ளோரணிவந்த சொல்லே மாறின தன்மையா லவ்வணி
கெடு மெனிற் சொல்லணி யெனப்படும். சொல்லேமாறினு மச்சொல்லால்
வழங்கியபொருளேமாறாதாயி னணியுங்கெடாதெனிற் பொருளணி யெனப்படும். (வ-று.)
முல்லை நகைத்தன - வென்றதற்கு, முல்லை பூத்தன - வெனிற் சொன்மாறவே யணி
நில்லாமையா லிது சொல்லணி யெனவும், பவளவா - யென்றதற்குச் சொன்மாறித்,
துகிற்போற் செவ்வா - யெனிற் சொன்மாறினு மதன் பொருண் மாறாமையா லணி நின்ற
தாகையி லிது பொருளணி யெனவுங் கண்டு கொள்க. ஆகையி லிவ்விருவகையணிபற்றி
யீரோத்தாக விவ்வதிகார முகியு மென்றுணர்க. எ-று. (2)