அருங்கலை யுணர்ந்தோ ரவைபதி னான்கும் கரந்தையுங் கரந்தைத் துறையு மென்ப. என்-னின், கரந்தைத்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கரந்தை, கரந்தையரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்தொழிதல், ஆளெறிபிள்ளை, பிள்ளைத்தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியன்மலிபு, குடிநிலை என இவை பதினான்கும் கரந்தைத் திணையும் துறையுமாம் எ - று. 22. கரந்தை மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத் தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று. (இ - ள்.) மாறுபட்டெழுந்தார் மாற்சரியங் கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது எ - று. வ - று.1அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றாற் - செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல் நேரார்கைக் கொண்ட நிரை. (இ - ள்.) ஆரவாரியாநின்ற கடல்சூழ்ந்த ஞாலத்துப் பெறுதற்கரிய உயிரைக் கூற்றுவன் உண்டபின்பு மீட்ட தன்மைத்து; வளப்பத்தினை யுடைய மறக்குடிகள் 4 கொப்புநிறைந்த கரந்தையைத் தலையிலேசூடித் தாங்கொள்ளுமது, பகைவர் கைப்பற்றின ஆனிரையை எ - று. கோடல் வீடுகொண்டற்றென்க. ஆல் : அசை. தாம் கோடலைப் பொறாத வெட்சியார் கையினின்றும் கொள்ளப்பட்டன நிரை; இது வீடு கொண்டற்றென்றுமாம். (1) 23. கரந்தை யரவம் 2நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய 5விரைவனர் குழூஉம் வகையுரைத் தன்று. (இ - ள்.) பசுநிரையைக் கைப்பற்றினமை கேட்டுச் செய்யாநின்ற காரியம் தவிரக் கடுகினராகித் திரளுங் கூறுபாட்டைச் சொல்லியது எ- று. (வ - று.)3காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன் கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே உளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு.
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. சீவக. 428, ந. மேற். 3. நன். சூ. 354, மயிலை. மேற். (பி-ம்) 4. 'கொத்து' 5.'விரையினர்', 'விரையுனர்' |