பக்கம் எண் :

பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல்
விறலி கேட்பத் தோழி கூறல்
வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல்
10பரத்தை வாயில் பாங்கிகண் டுரைத்தல்
பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்
குற்றிசை யேனைக் குறுங்கலி யுளப்பட
ஒத்த பண்பி னொன்று தலையிட்ட
ஈரெண் கிளவியும் பெருந்திணைப் பால.

என்-னின், இதுவும் பெருந்திணைப்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செலவழுங்கல் முதலாகக் குறுங்கலியீறாகச்சொல்லப்பட்ட பதினேழும் பெருந்திணைப்பாலவாம் எ-று.

அவற்றுள்:-

325. செலவழுங்கல்

நிலவுவே னெடுந்தகை நீள்கழையாற்றிடைச்
செலவுமுன் வலித்துச் செலவழுங் கின்று.

(இ - ள்.) நிலவுபோல ஒளிவிடும் வேலினையும்பெரிய மேம்பாட்டினையுமுடையவன் உயர்ந்த மூங்கில் இயைந்த வழியிடைப் போவானாக முன்னே நிச்சயித்துப் போக்கு ஒழிந்தது எ-று.

வ - று.1நடுங்கி நறுநுதலா ணன்னலம்பீர்பூப்ப
ஒடுங்கி யுயங்க லொழியக் - கடுங்கணை
2வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச்
செல்லே மொழிக செலவு.

(இ - ள்.) நடுக்கமுற்று, மணங்கமழும் நுதலினையுடையாள் மிக்க அழகு பீர்க்கம்பூப்போலப் பசப்ப மெலிந்து வருந்துதல் தவிரக் கொடிய அம்பினையுடைய வில்லை ஏருழவாகவுடைய வேடர்தம் முழையையுடைய உயர்ந்த பெரிய மலையிடத்துப்போகாம்; நெஞ்சே, தவிர்வாயாக போக்கை எ-று.

(1)

326. மடலூர்தல்

ஒன்றல்ல பலபாடி
மன்றிடை மடலூர்ந்தன்று.

(இ - ள்.) ஒன்றன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின்நடுவே மடன்மாவைச் செலுத்தியது எ-று.

வ - று. இன்றிப் படரோ டியானுழப்பவைங்கணையான்
வென்றிப் பதாகை யெடுத்தானாம் - மன்றில்
தனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக்
குனிமடன்மாப் பண்ணிமேல் கொண்டு.


1. தொல். அகத். சூ. 54, இளம். மேற்.; 2. பு. வெ. 5, கொளு, குறள், 872.