(இ - ள்.) தும்பை, தும்பையரவம், தானைமறம், யானைமறம், குதிரை மறம், தார்நிலை, தேர்மறம், பாண்பாட்டு, இருவருந்தபுநிலை, எருமை மறம், ஏமவெருமை, நூழில், நூழிலாட்டு, முன்றேர்க்குரவை, பின்றேர்க்குரவை, பேய்க்குரவை, களிற்றுடனிலை, ஒள்வாளமலை, தானை நிலை, வெருவருநிலை, சிருங்காரநிலை, உவகைக்கலுழ்ச்சி, தன்னைவேட்டல், தொகைநிலையென இருபத்துநான்கும் தும்பைத்திணையும் துறையுமாம் எ - று. 127. தும்பை செங்களத்து மறங்கருதிப் பைந்தும்பை தலைமலைந்தன்று. (இ - ள்.) குருதியாற் சிவந்த களத்து மாறுபாட்டை நினைந்து பசுந்தும்பையாகிய 1போர்ப்பூவை முடியிடத்துச் சூடியது எ - று. வ - று. கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலநனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து. (இ - ள்.) மேகத்தை ஒப்புக்குறித்து ஒழியாதுநின்று முழங்கும் ஆரவாரத்தாற் சிறந்த சீரிய வீரமுரசினையுடையான், ஒழுகுங்குருதி சூழ்ந்து பொருகளத்தை நனைப்பப் பூசலை நினைந்து வலியையுடைய தும்பை மாலையைச் சூடினான்; குற்றந்தீர்ந்த புகழினையும் வெம்மை மிக்க சேனையினையும் உடைய எம் மன்னன் எ - று . (1) 128. தும்பை அரவம் பொன்புனைந்த கழலடியோன் தன்படையைத் தலையளித்தன்று. (இ - ள்.) அழகணிந்த வீரக்கழற்காலினையுடையான் தனது சேனையைத் தலையளி பண்ணியது எ - று. வ - று.2வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையும் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு. (இ - ள்.) போர்வெல்லும் அடையாளமும் 3பற்றும் சிறந்ததனமும் மருத நிலமும் கொல்லும் யானையும் குதிரையும் வழங்கி அருள்செய்தான்.
1. போர்ப்பூ : பு - வெ . 241; மதுரைக். 596, ந. 2. குறள். 762, பரிமேல் . வி. 3. பற்று - பல ஊர்களையுடைய சிறுநாடு. |