84தொன்னூல்விளக்கம்
வேற்றுமை யுருபு பெறுவனவன்றியே வினையைப்போல நடப்பனவா மென்பதாயிற்று;
அங்ஙன நடப்புழி வினைக்குறிப்பெனப்படும். இவையே பெயரியலிசைத்த சொல்லாயினும்
வினையின் றொழிலைக் குறிப்பனவும் வினையைப்போல நடப்பனவு மாகையில்
வினையை விளக்கிய விடத்து வந்த முறை யெனக் காண்க. வினைக்குறிப்பெல்லா
மூவிடத்தைம்பால் வினைச்சொற்கேற்ற விகுதியைப் பெற்றுமுடியும். (உ-ம்.)
பூணினேன்-யான், பூணினேம் - யாம், பூணினை - நீ, பூணினீர் - நீர், பூணினான் -
அவன், பூணினாள் - அவள், பூணினார் - அவர், பூணிற்று - அது, பூணின - அவை,
என வரும். பொருண்முதலாறு காரணங்களால் வரும் பெயர்ப் பகுபத மெல்லாம்
வினைக்குறிப்பாக நடப்பனவாமெனக்கொள்க. அன்றியும், வினைக்குறிப்பு
வினையைப்போலப் பெயர்முதலாயினவேற்றி மற்றொன்றை வேண்டாது நிற்பது
வினைக்குறிப்புமுற்றெனப்படும். (உ-ம்.) குறள். - "அகரமுதல வெழுத்தெல்லாமாதி,
பகவன்முதற்றேயுலகு." இதனுள் முதற்று என்னுஞ்சொல் அஃறிணை யொருமைக்கண்
வினைக்குறிப்பு முற்றெனவும், முதல வென்னுஞ் சொல் அஃறிணைப்பன்மைக்கண்
வினைக்குறிப்பு முற்றெனவும்படும். (உ-ம்.) இறைவகொடியை, தாயேயினியை,
நீரேதண்ணியை, தீயேவெய்யை, இவை பொதுமைய, இவைதீய, அவைநல்ல, எ-ம்.
'ஆங்குய்யல் வெஃகியறஞ் செய்க செய்தபின், னீங்குய்யற்பாலபல.' எ-ம். வரும்.
எ-று. (1)
 

124.

வினைக்குறிப் பொன்றன்பால் விகுதி துவ்விஃதே
வலிமிகத் துறுடுவாம் ஐர யவ்வுமல்
லின்னு மளவு முறையீற்ற பெயர்க்கே
அவ்விறு மெல்லாம் பலவின் பாற்கே.
 
     (இ-ள்.) வினைக்குறிப்புக்கோர் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். ஒன்றன்பால்
வினைக்குறிப்பு வினையைப்போலவே துவ்வெனமுடியும். (உ-ம்.) அரிது, பெரிது,
வெய்யது, நொய்யது, முகத்தது, புறத்தது, என வரும். அன்றியும், வினைக்குறிப்பிடத்து
வரும்பெயர்ப்பகுதி வேற்றுமைப்பொருளாக வந்து தொக்கு நிற்கு மென்றுணர்க. (உ-ம்.)
தீமைத்து, கடற்று, மாரி நாட்டு; இவற்றை விரிக்குங்கால் தீமையைக் கொண்டது,
கடலிலுள்ளது, மாரிநாளிலாயது, என வரும். ஐயெனு முயிரும் ர், ய், என வீரொற்றுமீற்ற
பெயரே வினைக்குறிப்பொன்றன்பால் விகுதியெனுந் துக்கொள்ளுங்காலைத் தொகைநிலை
யிலக்கணத்தானே வரும். வல்லின வெழுத்திரட்டுமாகையில் ஈண்டுத் தகரவொற்று
வரப்பெறும். (உ-ம்.) உடைத்து, தீமைத்து, நடைத்து, எ-ம். பெயர்த்து, ஊர்த்து, எ-ம்.
பொய்த்து, மெய்த்து, எ-ம். வரும். குறள். - 'பல்லார் பகை கொளலிற்பத்தடுத்த
தீமைத்தே, நல்லார் தொடர் கைவிடல்,' பிறவுமன்ன. அன்றியும், எழுத்திணைந்தியலுஞ்
சந்தியிலக்க ணத்தானே வேற்றுமைப்பொருளா நிலைப்பதவீற்ற ல ன க்கீழும் ள க்கீழுந்