‘வினைமுதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழில் படுத்துவது. கருவியாவது வினைமுதல் தொழில் பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது’ என்பது சேனாவரையர் கூறிய விளக்கம். வடநூல் கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் உரைத்ததே இவ்வாசிரியரும் உரைத்தார். வினைக்கண் செயப்படு பொருள் யாண்டும் அகநிலையாக உள்ளமை உண்டான் என்பதனை உண்ணுதலைச் செய்தான் எனவும், நடந்தான் என்பதனை நடத்தலைச் செய்தான் எனவும் கருதிக்கொள்ளுதலான் உளதாதல் எல்லா ஆசிரியருக்கும் உடன்பாடு. இது ‘வினையே செய்வது’ (தொல்.சொல்.112 நச்.) என்ற நூற்பாவான் விளங்கும். அகநிலைச் செயப்படு பொருட்கு வருதலைச் செய்தான் என முனிவரும் எடுத்துக்காட்டுத் தந்துள்ளமையும் (நன்.296 விருத்தி) காண்க. எனவே இம்மறுப்பு, தம்கொள்கையை மறந்து உரைப்பதால் காண்க. |