சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-3275

ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதிஉறுப்புக் குறைந்த குறைச்சொல்
ஆகிய எச்சங்களைப் போலாது, அவ்வுறுப்போடு கூடி நிறைந்து நின்று பெயரன்றி
வினைச்சொல் முதலியவற்றுள் ஒன்றனையும் ஏலாது பெயர்ப்பின் வேறு ஒன்றனையும்
ஏலாது நிற்பன வினைமுற்றாம். (நன்.323-விருத்தியுரை)

செய்கையும் பாலும் காலமும் செயப்படுபொருளும் தோன்றி நிற்றலின்
முற்றுச்சொல் என்பாரும், மற்றொரு சொல் நோக்காது முடிந்து நிற்றலின் முற்றுச்சொல்
என்பாரும், எக்கால் அவை எச்சம் பெற்று நின்றன அக்கால் பின்யாதும் நோக்காவாய்ச்
செப்பு மூயிற்றுப்போல அமைந்து மாறுதலின் முற்றுச்சொல் என்பாரும் என
இப்பகுதியர் ஆசிரியர் என்பது. (தொல்.சொல். 421.உரை)
 

சூறாவளி
 

முற்றிற்கும் எச்சத்திற்கும் தமக்கு வேண்டியவாறே இடர்ப்பட்டு இலக்கணம்
கூறினார்; அவாய்நிலை இல்வழியும் ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’ காண்கும்
வந்தேம்’ என்பன பிறிதோர் சொற்பற்றியல்லது நிற்றல் ஆற்றாமையின் அவை
எச்சமாவான் சேறலான், அஃது இலக்கண வழுவாதல் அறிக.
 

அமைதி
 

முற்றிற்கும் வினையெச்சத்திற்கும் சேனாவரையர் கூறியவாறே இவ்வாசிரியரும்
விளக்கம் தந்துள்ளார். இவ்விதிக்கு விலக்காக அமைந்தவை செய்கு- செய்கும்- என்னும்
முற்றும், மார் ஈற்று முற்றும் என்பது பின்னர் விளக்கப்படும்.