வாவும் வாம் எனவும், போகும் போம் எனவும், வகர உகரமாகிய ஈற்று அயல் உயிர்மெய் கெட்டன. சேறல் என்பதற்கு இந்நூற்பாவில் கெடுதல் என்பது பொருள். வரவும் புரவி, போகும்புழை என்பன எதிர்காலப்பெயரெச்சத்தொடர். வினைத்தொகையாயின் வினைப்பகுதியே பெயரொடு சேர்தல் வேண்டும். அது வரவுபுரவி போகுபுழை என்றாற்போல வரும். கலுழுமே- கலுழ்மே- ஈற்றயல் உகரஉயிர் கெட்டது. மொழியுமே- மொழிமே- ஈற்றயல் உயிர்மெய் கெட்டது. உம் ஈற்று முன்னிலை முற்று வேறு, செய்யும் என்ற முற்று வேறு என்பது முன்னும் கூறப்பட்டது, கேளுமோ, உரையுமோ, என்பன முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்கள்; இவை ஈற்றயல் உயிரும் உயிர்மெய்யும் கெட்டுக் கேண்மோ, உரைமோ என வந்தன. கேண்மோ என்புழி ளகரத்துக்கு மகரத்தோடு மயக்க விதியின்மையின் மகரத்தோடு மயங்குதற்கேற்ற ணகரமாக ளகரம் திரிந்தது. மருளும் என்பது மருண்ம் என்றானதும் மயக்கவிதியின்மை பற்றி என்பது கூறப்பட்டது. ஈற்றயல் உயிர்மெய்யை ஆசிரியர் ஈற்று உயிர்மெய் என்றார். இங்ஙனம் ஈற்றயல் எழுத்தை ஈறு என்பது தொல்காப்பியனாருக்கும் உடன்பாடாதல், |