பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-1487

நாளை உண்டான்- நெருநல் உண்பான்- உண்டான் நாளை- உண்பான் நெருநல்-
என்பனபோல ஒருகாலச் சொல் ஒருகாலச் சொல்லொடு முடியும் காலவழுவும்,

ஒருவிரல்காட்டிச் சிறிதோ பெரிதோ- கறக்கின்ற எருமை காட்டிப் பாலோ
சினையோ என்பனபோல வினாவப்படாத பொருள்பற்றி வரும் வினா வழுவும்.

கடம்பூர்க்கு வழியாதோ என இடம்பூணி என் ஆவின் என்று- கருவூர்க்கு வழி,
யாதோ எனப் பருநூல் பன்னிரு தொடி- என்பன போல வினாவுதற்கு இறைஆகாச்
செப்பு வழுவும்,

யானைமேய்ப்பானை இடையன் என்றும், மாடுமேய்ப்பானைப் பாகன் என்றும்
பிறிது ஒரு காரணம் பற்றாது ஒரு பொருட்கு உரிய வழக்கு ஒருபொருள் மேல்
சென்றது எனப்படும் மரபு வழுவும் என எழுவகையாம் என்பதூஉம் பெற்றாம். பிறவும்
அன்ன. 1
 

விளக்கம்
 

தொல்காப்பியத்துக் கிளவியாக்கம் பற்றிய செய்திகள் இவ்வியலின் முப்பத்தொரு
நூற்பா முடியக் கூறப்பட்டுள்ளன. எச்சவியல் பற்றிய செய்திகள் இவ்வியலின் ஏனைய
நூற்பாக்களால் விளக்கப் பெறுகின்றன.

முதல் நான்கு இயல்களுள்ளும் தனி மொழிகளாகிய பெயர் வினை இடை உரி
என்ற நால்வகைச் சொற்களின் இலக்கணங்கூறி இவ்வியற்கண் பெரும்பான்மையும்
தொடர்மொழி இலக்கணம்பற்றிய செய்திகளும் சிறுபான்மை தனிமொழி இலக்கணம்
பற்றிய செய்திகளும் குறிப்பிட்டுச் செய்திகளைக் குறைவறக் கூறியுள்ளார்.

தொல்காப்பிய எச்சவியல் போலவும் காரிகையின் ஒழிபியல் போலவும் நன்னூலின்
பொதுவியல் போலவும் இந்நூலின் பொதுவியல் சிறந்த பல இன்றியமையாத செய்திகளை
உட்கொண்டுள்ளமை காண்க.