குறிஞ்சி முதலிய பெயர்கள் அவ்வந்நிலத்துக் கருப் பொருள்களாகிய
பூக்களுள் சிறந்தனவற்றை அடிப்படை யாகக்கொண்டே அமைந்தன என்பது
உரையாசிரியர் கருத்து.
குறிஞ்சி முதலாகிய பெயர்கள் புணர்தல் முதலிய உரிப்பொருள்கள்
பற்றி அமைந்தன என்பது நச்சினார்க்கினியர் கருத்து. "முல்லை முதலிய
பூவால் பெயர் பெற்றன இவ்வொழுக்கங்கள்எனின், "அவ்வந்நிலங்களுக்கு
ஏனைய பூக்களும் உரிய ஆகலின் அவற்றால் பெயர் கூறலும் உரிய" எனக்
கடாவுவாற்கு விடையின்மை உணர்க" என்று நச்சினார்க்கினியர்
உரையாசிரியர் கருத்தினை மறுத்துள்ளார். முல்லை முதலிய
பெயர்க்காரணங்களைத் திரு மு. இராகவ ஐயங்கார் தம் பொருளதிகார
ஆராய்ச்சியில் விரிவாகக் கூறியுள்ளார்.
பூக்களால் நிலன்கள் பெயர்பெற்றமைக்குச் சங்கப் பாடல்களிலிருந்து
எடுத்துக்காட்டுக்கள் தரப்பெற்றுள்ளன. இவ்வாசிரியர் திணைப்பெயரீட்டிற்கு
உரையாசிரியர் நச்சினார்க்கினியர் என்ற இருவர் கருத்தையும்
ஏற்றுக்கொண்டவராவர்.
உரிப்பொருள் 21-ஆம் நூற்பாவில் விளக்கப்பெறும்.